"நடராஜன் சார், இன்னைக்கு சாயந்திரம் நான் ஊருக்கு கிளம்பறேன். சுகன்யா அவளால் முடிஞ்ச வரைக்கும் இங்க உங்களுக்கு உதவியா இருக்கணும்னு விருப்பப்படறா. நீங்க அதுக்கு அனுமதிக்கணும். தம்பி சுகமாயி வீட்டுக்கு வரட்டும். அதுக்கப்புறம் ஒரு தரம் நீங்க எனக்கு போன் பண்ணுவீங்கன்னு எதிர்பாக்திறேன். போயிட்டு வரோம்..." மல்லிகாவிடமும், அவள் பக்கத்தில் நின்ற மீனா மற்றும் சீனுவிடமும் பொதுவாக கை கூப்பினார் ராகுராமன்.
"நல்லதுங்க; உங்களைப் பாத்ததுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி: போய்ட்டு வாங்க; நீங்களும் போன் பண்ணுங்க. சீனு, நம்ம வண்டி வெளியில பார்க்கிங்க்ல இருக்கு; நீ இவங்களை அவங்க வீட்டுல ட்ராப் பண்ணிட்டு வந்துடறியா?" எநிதிரபடி கார் சாவியை அவனிடம் நீட்டினார் நடராஜன்.
நடராஜனைப் பார்த்து கை கூப்பிய சுந்தரி, மல்லிகாவின் அருகில் சென்று அவள் கையை தன் கையில் எடுத்துக்கொண்டாள்.
"நம்ம பசங்க ஒருத்தருக்கு ஓருத்தர் பரஸ்பரம் ஆசைப்பட்டுட்டாங்க. சீக்கிரமா ஒரு நல்லது நடந்து அவங்க சந்தோஷமா இருக்கணும்ங்கறது என் ஆசை. குறையே இல்லாதவங்கன்னு யாரும் இந்த ஊர்லே இல்ல; சுகன்யாவும் உங்க பொண்ணுதான். நீங்க அவகிட்ட ஏதாவது ஒரு குத்தம் குறையை பாத்துருக்கலாம்; நீங்க அதை தாராளமா அவகிட்ட சுட்டிக்காமிக்கலாம்: அவ நிச்சயமா தன்னை திருத்திக்குவா: கண்டிப்பா நீங்க எங்க வீட்டுக்கு வரணும்: உங்களை நான் எதிர்ப்பார்த்துக்கிட்டே இருப்பேன். இப்ப நான் போய்ட்டு வரேங்க." என்று சொல்லிவிட்டு புன்னகையுடன் நடக்க ஆரம்பித்தாள்.
சிறிது நேரத்திற்க்கு பிறகு..,
"அப்பா எனக்கு ரொம்ப பசிக்குதுப்பா... சீனுவுக்கு போன் பண்ணட்டும்மா, அவங்களை வீட்டுல விட்டுட்டு திரும்பி வரும்போது, அவனை ஏதாவது ஹோட்டல்லேருந்து டிஃபன் வாங்கிட்டு வரச்சொல்றேனே....?" மீனா நடராஜனிடம் வினவினாள்.
"எனக்கும் தான் பசியில தலை வலிக்க ஆரம்பிச்சிடுச்சு; மணியும் ஒண்ணாக போகுது: டாக்டர் சொன்ன மாதிரி நான் ஒரு ஆள் இங்கேயே இருக்கேன்; சீனு வந்ததும் நீங்க எல்லாம் பக்கத்துல எதாவது நல்ல ஹோட்டல் இருந்தா, சட்டுன்னு எதையாவது சாப்பிட்டுட்டு, எனக்கு ஒரு தயிர் சாதம் பார்சல் வாங்கிட்டு வந்துடுங்க: நான் வெளியில மரத்தடியிலே உக்கார்ந்து ஒரு வாய் அள்ளிப் போட்டுக்கிறேன்." என்ற மல்லிகா தன் பெண்ணைப் பார்த்தாள்.
"அம்மா, சுகன்யாவை மறந்துட்டியா?" என்றாள் அவள்,
"ஏண்டி, நீ என்ன என்னை ஒரு கொடுமைக்காரின்னே முடிவு கட்டிட்டியா? இல்ல இதயமே இல்லாத ராட்சசின்னு நினைக்கிறியா? பாவம் அந்த பொண்ணு, என் புள்ளைக்காக தன் ரத்தத்தை குடுத்துட்டு, காலையிலேருந்து பச்சை தண்ணி கூட குடிக்காம துடி துடிச்சுக்கிட்டு இருக்காளே: அது எனக்கு புரியலன்னு நினைக்கிறியா? சுகன்யா உன் பொண்ணுன்னு இப்பத்தான் அஞ்சு நிமிஷம் முன்னாடி அவ அம்மா சொல்லிட்டு போனா: சுகன்யாவை விட்டுட்டு நான் சாப்பிடுவேனா?"
"அப்புறம் ஏம்ம்மா... காலையில அவகிட்ட அவ மனசு புண்படற மாதிரி பேசினே? ஏன் எல்லாரும் உன்னை தப்பா நினைக்கிற மாதிரி நடந்துகிட்ட?" மீனா தன் தாயின் தோளை ஆதுரத்துடன் அழுத்தினாள்.
"நீ கேக்கிற கேள்விக்கெல்லாம் என்னால இப்ப உனக்கு பதில் சொல்ல முடியாது. நான் சொன்னாலும், நான் சொல்றதுல இருக்கற அர்த்தம் உனக்கு இப்ப புரியாது"
"சரி... அவளுக்குத்தான் நீ சொல்றதுல இருக்கற அர்த்தம் புரியாது; எனக்கும் புரியாதா? இப்பத்தான் அவளை நீ நேராப் பாத்துட்டியே: அந்த பொண்ணோட அம்மாவையும் பாத்துட்டே; அவ தாய் மாமாவையும் பாத்துட்டே; சும்மா ஜாலியா பையனுங்க பின்னால வண்டியில ஏறி ஊர் சுத்திட்டு, சினிமா பாத்துட்டு... அவன் காசுல பாப்கார்ன்னும் ஐஸ்க்ரீமும் வாங்கித் திண்ணுட்டு, அப்புறமா அந்த பையனுக்கு டாட்டா காட்டிட்டு, ஃபாரின்லேருந்து வழுக்கை விழுந்த சொட்டைத்தலையன் எவனாவது கிடைச்சான்னா, அவன் பின்னாடி போற இந்த காலத்து பொண்ணுங்க மத்தியில, உன் பிள்ளைக்காக ஓடி ஓடி அவ பண்ற காரியங்களையும் உன் கண்ணால பாக்குற; உன் மனசுல கை வெச்சு சொல்லுடி: உனக்கு அவளைப் பிடிக்கல்லேன்னு? அவ நம்ம பையனுக்கு ஏத்தவ இல்லையா?" நடராஜன் வேகமாக அவர்கள் பேச்சில் குறுக்கிட்டார்.
"இப்பவே இங்கேயே எல்லாத்தையும் எங்கிட்ட பேசி முடிச்சே ஆகணுமா?" மல்லிகாவின் முகம் மெலிதாக சிவக்க ஆரம்பித்தது.
"ஆமாம்; அப்படித்தான்னு வெச்சுக்கோயேன்; உன் பைத்தியக்காரத்தனத்துக்கு ஒரு அளவே இல்லாமப் போச்சு; உன் மனசுல என்னத்தான் இருக்குன்னு தெரியலை; நீ அவகிட்ட என்ன எதிர்ப்பாக்குற: சொன்னாத்தானே தெரியும்; உன்னால, நீ உளறினதால, காலையிலே அவங்க ரெண்டு பேருகிட்டவும், நான் மன்னிப்பு கேக்க வேண்டியதாச்சு: அவளை உனக்கு ஏன் புடிக்கலைன்னு; உண்மையை சொல்றதுல உனக்கு என்ன தயக்கம்?"
"....."
"சொல்லுடி மல்லிகா; ஏன் பதில் சொல்ல மாட்டேங்கிற?"
"எனக்கும் அவளைப் பிடிச்சிருக்குங்க; ஆனா..."
மல்லிகா தன் வார்த்தையை முடிக்கும் முன், சுகன்யா கையில் ஒரு கேரி பேக்குடன் வேகமாக மூச்சிரைக்க அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.
தன் மாமாவையும், அம்மாவையும் வழியனுப்பிவிட்டு நின்ற சுகன்யாவுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. 'நாம ஓடி வந்த மாதிரிதான் செல்வாவோட குடும்பமும், ஆக்சிடெண்ட் ஆன விஷயத்தைக் கேள்விப்பட்டு, அரக்க பரக்க ஹாஸ்பெட்டலுக்கு ஓடி வந்திருப்பாங்க; அவங்களும் கண்டிப்பா காலையில அவ்வளவு சீக்கிரமா டிஃபன் சாப்பிட்டிருக்க மாட்டாங்க. அவங்களும் இப்ப பசியோடத்தான் இருப்பாங்க. செல்வா இப்போதைக்கு கண் விழிக்கமாட்டான்னு டாக்டர் சொன்னார்; அவன் தூங்கிக்கிட்டு இருக்கும்போது, ஏதாவது டிஃபன் வாங்கிட்டு போய் அவங்களுக்கும் குடுத்துட்டு, தானும் சாப்பிட்டால் என்ன' என்று அவள் மனதில் பட்டது.
மருத்துவமனைக்கு சற்று தள்ளியிருந்த ஹோட்டலில் நுழைந்து அத்தனை பேருக்கும் போதுமான அளவிற்கு தக்காளி சாதமும், ரெண்டு பாக்கெட் தயிர் சாதமும், தொட்டுக் கொள்ள மசால் வடையும், கூடவே ரெண்டு பாட்டில் மினரல் வாட்டரும் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள் சுகன்யா.
"அத்தே; எவ்வளவு நேரம் நீங்க வெறும் வயித்தோட இருப்பீங்க, ஏதாவது கொஞ்சம் சாப்பிடுங்களேன்"
"இல்லம்மா, எனக்கு பசியில்லை, நான் காத்தால இங்க வர்றதுக்கு முன்னே சாப்பிட்டுட்டுத்தான் வந்தேன்; நீங்கள்ளாம் சாப்பிடுங்க, நீ ரத்தம் வேற குடுத்துட்டு வந்திருக்கே, டயர்ட்டா இருப்பே" மல்லிகா வேண்டுமென்றே சுகன்யாவின் முகத்தைப் பார்க்காமல் பேசிவிட்டு, தன் மனதுக்குள் யோசிக்கத் தொடங்கினாள்.
'இவ கொஞ்சம் பார்க்கற மாதிரி அழகா இருக்காளே, திமிர் பிடிச்சவளா இருப்பாளோன்னு நினைச்சேன்; இல்லாட்டி அசமஞ்சமா இருக்கப்போதுன்னு நெனச்சேன், ஆனோ ரெண்டுலயும் சேராம, கெட்டிக்காரியாத்தான் இருக்கா. எல்லோரும் பசியோட இருப்போமேன்னு, தான் காதலிச்சவன் குடும்பத்துக்காக, உரிமையா ஓடிப்போய் எதையோ சட்டுன்னு வாங்கிட்டு வந்திருக்காளே: நல்ல தாராள மனசுதான் இவளுக்கு: பை நெறையவும் வாங்கிட்டு வந்திருக்கா! நான் நெனைச்ச மாதிரி, ஆசையா அத்தைன்னு கூப்பிட்டு என்னையும் எப்படி தந்திரமா வளைக்கறாப் பாரு; அவ கையால குடுக்கறதை மனசு திருப்தியா வாங்கிச் சாப்பிட்டுட்டு அப்புறம் நீ வேணாண்டின்னு எப்படி அவ கிட்டவே சொல்லுவேன்'
'இவ நம்ம வீட்டுல இருக்கிற எல்லாரையும் ஏற்கனவே தன் கையில போட்டுக்கிட்டா: இப்ப நீ ஒருத்திதான் பாக்தி மல்லிகா; இவதிட்ட நீ மசிஞ்சிடாதேடி.'
மீனா சுகன்யாவை பெருமையுடன் பார்த்தாள்.
'சுகன்யாவும் கில்லாடியாத்தான் இருக்கா: சாப்பாட்டைக் கையில வச்சிக்கிட்டு, பசியில துடிச்சிக்கிட்டு நிக்கற நம்ப அம்மாவை படால்ன்னு அத்தைன்னு கூப்பிட்டு தன் வழிக்கு கொண்டாரப் பாக்கிறாளே' என்றெண்ணி மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.
"அத்தை, உங்களுக்கு என் மேல என்னமோ கோபம்; அதை மனசுல வச்சிக்கிட்டுத்தான், நான் டிஃபன் வாங்கிட்டு வந்திருக்கேன்னு சாப்பிடமாட்டேங்கிறீங்க; செல்வா சொல்லியிருக்கார்: ஞாயித்துக்கிழமையில நீங்க பதினோரு மணி வாக்கிலத்தான், நிதானமா குளிச்சு முழுகிட்டு, சாம்பார், பொறியல்ன்னு முழு சமையல் பண்ணித்தான் சாப்பிடுவீங்கன்னு: உங்க முகமே சொல்லுது; இப்ப நீங்க பசியோட இருக்கீங்கன்னு; உங்க கோபம் ஒருபக்கத்துல இருக்கட்டும்; எனக்காக இப்ப ஒரு வாய் சாப்பிடுங்க... ப்ளீஸ்..." சுகன்யா கெஞ்சலாகப் பேசினாள்.
'அடப்பாவி! இந்தப் பய புள்ளை என் மானத்தை வாங்கறதுக்குன்னே பொறந்திருக்கான். என்னைப் பத்தியும், என் குடும்பத்தைப் பத்தியும் இவகிட்ட இன்னும் என்ன என்ன சொல்லி வெச்சிருக்கான்னுத் தெரியலையே?' மல்லிகா தன் மனதுக்குள் மருகினாள்.
நடராஜன் அவர்கள் இருவருக்குமிடையில் நடந்துகொண்டுருந்த "நீயா நானா" விளையாட்டை, இதுல இன்னைக்கு ஜெயிக்கப் போறது யார் என்ற ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
"எனக்கு பசி உயிர் போவுது... என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க; நான் சாப்பிடறேன்: எனக்கு குடுங்க; சீனு வந்தான்னா யாருக்கும் ஒண்ணும் மிச்சம் இருக்காது... மொத்தமா வாரி கொட்டிக்கிட்டுப் போயிடுவான்; அப்பா இப்ப சாப்பிடறதுல உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனையில்லையே" மீனா கிண்டலாகச் சிரித்தவாறு அவள் கையிலிருந்த பையை வாங்கி பொட்டலங்களை வெளியில் எடுத்தாள்.
"எனக்கு என்ன பிரச்சனைம்மா? நிஜமாகவே எனக்குப் பசிக்குது: நான் சாப்பிட ரெடி: எனக்கு ஒரு தக்காளி சாதம் பொட்டலம் குடும்மா; மல்லிகா, சும்மா பிகு பண்ணிக்காம வந்து சாப்பிடுடி: உனக்குப் பிடிச்ச தயிர்சாதம், மசால்வடைன்னு சுகன்யா ஏகப்பட்டது வாங்கிட்டு வந்திருக்கா..." என்றபடி அவர் ஒரு பொட்டலம் தயிர்சாதத்தையும் ஒரு வடையையும் எடுத்து தன் மனைவியிடம் கொடுத்தார்.
"ரொம்பத் தேங்க்ஸ்ம்மா சுகன்யா: என்னம்மா எங்க வீட்டுல யாருக்கு என்ன என்ன பிடிக்கும்ன்னு அவன் உங்கிட்ட சொல்லி வெச்சிருக்கானா?' என்று அவர் சுகன்யாவை மன நிறைவுடன் பார்த்தார்.
"நம்மளை விட்டுவிட்டு சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்களா, சாப்பிடுங்க சாப்பிடுங்க; இது மாதிரி இங்க எதாவது நடக்குமுன்னு தெரிஞ்சுதான், சுகன்யாவோட அம்மா சுடச் சுடச் ஊத்திக் குடுத்த ஊத்தப்பத்தையும், பக்கோடா குருமாவையும் ஒரு புடி புடிச்சுட்டு வந்துட்டேன்; பாவம் நம்ம ஹீரோவுக்காக ஆசை ஆசையா காலையிலே எல்லாம் ரெடி பண்ணியிருக்காங்க; அவன் என்னடான்னா காலை ஓடைச்சிக்கிட்டு இங்க கட்டில்ல கிடக்கிறான்; மீனா... எல்லாத்துக்கும் அதிர்ஷ்டம் வேணும்டா கண்ணு..." சொல்லியவாறு மரத்தடி நிழலில் புல் தரையில் அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்த சீனு ஒரு மசால் வடையை எடுத்துக் கடித்தான்.
"சீனு, நான் உங்களை விட்டுடலை; உங்களுக்கும் சேத்துத்தான் வாங்கிட்டு வந்தேன். நீங்களும் தாராளமா சாப்பிடலாம்..." சுகன்யா அவன் பக்கம் சாப்பாட்டுபையை நகர்த்தினாள்.
"ச்சே.. ச்சே... நான் சும்மா உங்களை கலாய்ச்சுப் பாத்தேன்: நான் திருப்தியா உங்கம்மா கையால சாப்பிட்டாச்சு; சூப்ப்ப்பரா இருந்தது குருமா; உங்களுக்கும் இந்த அயிட்டமெல்லாம் பண்ணத்தெரியுமில்லயா: லெமன் ரைஸ்... அப்புறம் புளிசாதம் நல்லாப் பண்ணுவீங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்" அவன் சுகன்யாவைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான்.
"உனக்கெப்படிடாத் தெரியும்" மீனா குறுக்கிட்டாள்.
"ம்ம்ம்... வேறெப்படி... எல்லாம் நம்ம ஹீரோ சொல்லித்தான் தெரியும்... அவரு இங்க சென்னையில வேலையில இருந்த வரைக்கும், ஆபீசுல லஞ்சுல மனசுக்குப் பிடிச்சவாளுக்கெல்லாம், தவறாம பிரசாத வினியோகம் நடக்குமாம்..." சொல்லிவிட்டு அவன் சுகன்யாவைப் பார்த்து ஹோவென சிரித்தான்.
"உங்க கிண்டல்லாம் போதும்... இப்ப உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் இங்க அவசியம் சொல்லித்தான் ஆவணுமா... ஏற்கனவே அத்தை என் மேல கோபமா இருக்காங்க; நான் அவங்க புள்ளையை என் கையில போட்டுகிட்டேன்னு" சுகன்யா தன் முகம் சிவக்க புன்னகைத்தாள்.
"டேய்... சீனு... இவங்க ரெண்டு பேரையும் பத்தி உனக்கு வேறென்னல்லாம் தெரியும். சொல்லுடா கேக்கறதுக்கு ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு" மீனா ஆர்வத்துடன் கேட்டாள்.
"நீ இன்னும் சின்னப்பொண்ணு... அப்படியே அம்மாவுக்கு பாப்பாவா ஒரு ஓரமா ஒதுங்கி நில்லு: பெரியவா பேசும் போது நீ குறுக்க வரப்படாது; இதுக்கு மேல வேற எதுவும் கேக்காதே; அதெல்லாம் அடல்ட்ஸ் ஒன்லி விவகாரம்... உனக்கு வேண்டாம்... நோக்கு புரிஞ்சிக்கறதுக்கு வயசு பத்தாது"னு சொல்லிவிட்டு வெட்கமில்லாமல் மேலும் உரக்கச்சிரித்தான்.
சுகன்யா, மல்லிகா சாப்பிட ஆரம்பிப்பதற்காக காத்துக்கொண்டிருந்தாள். அவள் தன் கணவன் கொடுத்ததை கையில் வைத்துக்கொண்டு சீனு பேசுவதைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தாள்.
'சீனு என்ன சொல்றான்? இவங்க ரெண்டு பேர் நடுவில வேற என்னல்லாம் நடந்திருக்கும்?'
"சாப்பிடும்மா, நீ சாப்பிட்டாத்தான் சுகன்யாவும் சாப்பிடுவாங்கன்னு தோணுது" மீனா தன் அம்மாவின் இடுப்பில் கிள்ளினாள்.
அதற்கு மேல் மறுப்பெதுவும் சொல்ல முடியாமல் மல்லிகா மவுனமாக சாப்பிடத்தொடங்க, சுகன்யாவும் தக்காளி சாதத்தை சாப்பிடத் தொடங்கினாள்.
இரண்டு வாய் சாப்பிட்ட சுகன்யாவுக்கு தொண்டையை அடைத்து பொறை ஏறியது... இருமத் தொடங்கியவள், கண் கலங்க, கையிலிருந்த சாதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தண்ணீரை குடித்தாள்.
"என்னாச்சு சுகன்யா, ஏன் அழறீங்க" மீனா பதைபதைப்புடன் அவள் பக்கத்தில் நகர்ந்து உட்கார்ந்து அவள் தலையை லேசாகத் தட்டினாள்.
"ஒண்ணுமில்ல மீனா.. காலையில ஆசையா சாப்பிட வரேன்னு சொல்லிட்டு உன் அண்ணன் என் வீட்டுக்கு வந்தார்... வழியில அடி பட்டு இப்ப தூக்க மருந்து மயக்கத்துல பசியோட உள்ளே படுத்து கிடக்கறதை நினைச்சேன்... துக்கம் தொண்டையை அடைச்சிடுத்து: அவரை சாப்பிட கூப்பிட்டப்ப இப்படியெல்லாம் நடக்கும்ன்னு நான் நெனைக்கவேயில்லே... இப்படி நடக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா அவரைக் கூப்பிட்டே இருக்க மாட்டேன்.. அந்த குற்ற உணர்ச்சியோட என்னால சாப்பிட முடியலை" சுகன்யா தன் கண்களைத் துடைத்துக்கொண்டு முகத்தில் உணர்ச்சிகள் ஏதுமின்றி போலியாகச் சிரித்தாள்.
"உன் மேல எந்த தப்பும் இல்லம்மா... உன்னைப் பாக்க வந்ததுனாலத்தான் அவனுக்கு அடிபட்டுதுன்னு நீ நினைக்கறத தப்பு; நீ அப்படியெல்லாம் ஃபீல் பண்ணாதே; நடக்கணும்ன்னு இருக்கறதை யாராலும் தடுத்த நிறுத்த முடியாதும்மா... " நடராஜன் இதமாக அவளிடம் பேசியவாறு தன் மனைவியை ஓரக்கண்ணால் பார்த்தார்.
சுகன்யாவையே பார்த்துக்கொண்டுருந்த மல்லிகாவின் தாய்மை சட்டென விழித்தது; தன் மகனுக்காக சாப்பிடக்கூட முடியாமல் மனம் கலங்கும் அவளைப் பார்க்க பார்க்க அவள் உள்ளத்தின் மூலையில் இறுதிக்கிடந்த ஒரு பனிப்பாறை மெதுவாக உருகி கரையத் தொடங்கியது.
இருபத்தஞ்சு வருஷமா, தவமிருந்து ஆசையாக பெத்து, தோளிலும் மார்பிலும் போட்டு வளர்த்த தன் பிள்ளையை, தன் உடல் அழகைக் காட்டி, மினுக்கி, ஒரே நாளில் கொத்திக்கொண்டு போக வந்தவள் என சுகன்யாவின் மீதிருந்த, அர்த்தமில்லாத கோபமும், அவ்வப்போது சாவித்திரியின் பொறுப்பற்ற பேச்சுகளால், தன் மனதில் வளர்ந்துவிட்டிருந்த ஒரு இனம் தெரியாத பொறாமை உணர்ச்சியும் சட்டென குறையத் தொடங்க, மல்லிகாவின் மனம் மெல்ல மெல்ல லேசாகத் தொடங்கியது.
'இவ உடம்பால மட்டும் அழகா இல்லை; இவ மனசும் அழகாத்தான் இருக்கு'
சுகன்யாவை மல்லிகா முதன் முறையாக தன் மனதில் ஒரு நிறைவுடன் பார்த்தாள். சுகன்யாவின் முகம் இதுவரை அவள் உணர்ந்ததை விட மேலும் அழகாக இருப்பது போல் தோன்றியது.
தொடரும்...
அருமை சகோ
ReplyDeleteஎல்லோருக்கும் சாப்பாடு வாங்கி குடுத்து கரெக்ட் பண்ணிட்டா சுகன்யா 👍🏻
அழகு, அறிவு, அன்பு எல்லாம் ஒருங்கே அமையப்பெற்றவள் சுகன்யா.
Deleteஉண்மைதான் சகோ
Deleteஅழகான நாவல் படிக்கிற அனுபவம் எனக்கு
நன்றி நண்பா தொடர்ந்து ஆதரவு கொடுங்க.
Deleteகண்டிப்பா சகோ
ReplyDeleteஅருமையாக கதை போகிறது! காதல், முதிர் காமம், அம்மா செண்டிமெண்ட், தாய் மாமா செண்டிமெண்ட், அண்ணன் தங்கை உறவு, நண்பேன்டா நட்பு ன்னு எல்லாமே இருக்கு
ReplyDelete