"கண்ணு சுகா, வந்ததுலேருந்து யார்கிட்ட போன்ல பேசிட்டு இருக்கேம்மா, வந்து ஒரு வாய் சாப்பிடும்மா: காலையிலேருந்து சாப்பிடாமா கூட அலைஞ்சுட்டு வந்திருக்கே" சுந்தரி தட்டில் சாதத்தை போட்டுவிட்டு கூப்பாடு போட்டுக்கொண்டுருந்தாள்.
"இதோ வந்துட்டேம்மா... கோபலன் சார்கிட்ட பேசிட்டு இருந்தேம்மா... நீ படுத்துக்கோ... நான் சாப்பிட்டுட்டு எல்லாத்தையும் ஓழிச்சி போட்டுடறேன்."
இரவு உணவு முடிந்தது..,
"அம்மா, வாழைக்காய் பொறியல் நல்லா இருந்ததும்மா... மாமா போறதுக்கு முன்னாடி சாப்பிட்டாரா?" லைட்டை அணைத்துவிட்டு அம்மாவின் பக்கத்தில் கட்டிலில் படுத்தாள் சுகன்யா.
"ஆமாண்டி... நீ வர்றதுக்கு முன்னேயே அவன் அவசர அவசரமா ரெண்டு வாய் அள்ளிப் போட்டுக்கிட்டான்" சுந்தரி எழுந்து கவிழ்ந்து படுத்திருந்த தன் பெண்ணின் முடியை அவிழ்த்து அவள் முதுகின் ஈரத்தை மெல்லிய டவலால் துடைத்தாள்.
சுகன்யா திரும்பிப் படுத்து தன் தாயின் முகத்தைப் பார்த்தாள். "எம்மா... நான் ஒண்ணு கேட்டா கோச்சிக்க மாட்டியே?"
"என்ன பீடீகையெல்லாம் பெரிசாயிருக்குது"
"ம்ம்ம் ... நான் கேக்கறதை நீ எப்படி எடுத்திப்பியோன்னு சங்கடமா இருக்குதும்மா"
சுந்தரி சற்று ஆச்சரியமானாள். 'எப்போதும் பட படவென்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசும் மகள் இன்னைக்கு எங்கிட்ட பேச ஏன் தயங்கறா?'
"சொல்லுடி என்ன விஷயம்?"
"என் அப்ப்பா எங்க இருக்காருன்னு உனக்கு தெரியுமாம்மா?" வார்த்தைகள் தயக்கத்துடன் வந்தன.
சுந்தரியும் ஒரு நொடி அதிர்ந்துதான் போனாள். தன் பெண்ணிடமிருந்து எள்ளளவும் இந்த கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை என்பது அந்த விடிவிளக்கு வெளிச்சத்திலும் அவள் முகத்திலிருந்து தெரிந்தது.
"அந்தாள் பேச்சை யாராவது எடுத்தாக்கூட எண்ணையில விழுந்த வடை மாவு மாதிரி பொசுங்குவே, இப்ப இந்த கேள்விக்கு என்ன அவசதியம்ன்னு எனக்கு புரியலை."
"நான் உன் மனசை புண்படுத்தியிருந்தா... சாரிம்ம்மா..." சுகன்யாவின் குரல் தழுதழுத்தது. சொல்லிவிட்டு சரெலென திரும்பி படுத்துக்கொண்டாள்.
சுந்தரியின் மனம் ஒரு நிமிடம் அதிர்ந்தது, தன் பெண் அழுகிறாளா?
"சுகா... சுகா என்னடி ஆச்சு; இப்ப ஏன் அழுவறே? இப்படி திரும்பு என் பக்கம்." சுந்தரி அவள் தோளைப்பிடித்து தன் புறம் திருப்பினாள்.
சுகன்யா விம்மிக்கொண்டே எழுந்து, உட்க்கார்ந்திருந்த தன் தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டவள், தன் முகத்தை அவள் மார்பில் புதைத்துக்கொண்டாள். அவள் முதுகு குலுங்கியது.
'பாவம் இந்த பொண்ணு; மனசுல எதை வெச்சுக்கிட்டு இப்படி புழுங்கிப் போறா? அழட்டும்; அவள் அழுது முடிச்சா அவ மனசுல இருக்கற பாரம் குறையும்' என மவுனமாக இருந்த சுந்தரியின் முகம் உணர்ச்சிகளின்றி இருந்தது.
'சுகன்யாவுக்கு அப்ப வயசு என்ன? ஏழா இல்ல எட்டா? என் கணவன் குமார் வீட்டை விட்டுப் போன பதினைஞ்சு வருசத்துக்குப்பறம், "அப்பா எங்கம்மா?"னு என் பொண்ணு என்னைக் கேக்கிறா? அவன் மேல இவளுக்கு தடீர்ன்னு என்ன பாசம் பொங்குது? அவனா போனானா? நான் தானே அவன் தொல்லைத் தாங்கமா, வீட்டை விட்டு அடுச்சு விரட்டுனேன்? அதனாலதான் இவ இந்த அளவுக்கு வாழ்க்கையில உருப்புட்டு இருக்கா: இல்லன்னா அவன் இவளையே வித்து குடிச்சிட்டிரப்பான்?'
'இப்ப அவன் எங்க இருப்பான்? இருக்கிறானா? இல்ல செத்து தொலைஞ்சானா? அப்படி உயிரோட இருந்தாலும் எங்க நெனப்பு அவனுக்கு இருக்குமா? யாருக்குத் தெரியும்.'
'நான் மட்டும் இன்னும் அவன் கட்டின தாலியை கழுத்துல தொங்க விட்டுக்கிட்டு இருக்கேன். அவனைப் பத்திய எல்லா நெனைப்பையும் என் மனசுலேருந்து வேரோட பிடுங்கி எரிச்சு, எரிச்ச சாம்பலையும் தண்ணியில கரைச்சிட்டேன். என் மனசு அவனைப் பத்திய எந்த எண்ணமும் இல்லாம மரத்துப் போச்சு: இப்ப இவ ஏன் இந்த கேள்வியை கேட்டு மரத்துப் போன என் மனசை கிளறிப்பாக்குறா? இவ கேள்விக்கு எங்கிட்ட பதில் இல்லையே?' சுந்தரி ஒரு நீண்டப் பெருமூச்சினை வெளியேற்றினாள்.
அழுது முடித்து தன் உதடுகளைக் கடித்துக்கொண்டு, சிறு குழந்தையைப் போல், தன் முகத்தையே பார்த்துக்கொண்யிருந்த தன் பெண்ணை, சுந்தரி ஒரு முறை தன் மார்புடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள். பின் ஆசையுடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
"கண்ணு, நான் இருக்கேண்டா உனக்கு; உனக்கு என்ன வேணும் சொல்லு: ஏன் மனசு குழம்பிப் போறே; என் லைப்ல அவன் சாப்டர் எப்பவோ முடுஞ்சிப்போச்சு: எனக்கு இப்ப அவன் மேல எந்த கோபமோ, வருத்தமோ இல்லை. நான் நிம்மதியா இருக்கேண்டா செல்லம். அவன் நெனைப்பு என் மனசுல சுத்தமா இல்லடி கண்ணு: உன் அப்பாவைப்பத்தி செல்வா வீட்டுல கேட்டாங்கன்னு சொன்னப்ப; ஒரு வினாடி, ஒரே ஒரு வினாடி அவன் நெனப்பு என் மனசுல வந்தது உண்மைதான். இவனால என் பொண்ணுக்கு, அவ மனசுக்கு புடிச்ச வாழ்க்கையை அமைச்சுக்கறதுல தடங்கல் வந்துடுமோன்னு நினைச்சேன்; ஆனா இன்னைக்கு உன் செல்வாவோட அப்பாவை பாத்ததுக்கு பின்னாடி, அவர் எங்ககிட்ட நடந்துகிட்டதை பாத்ததுக்கு அப்புறம் அந்த பயமும் என் மனசை விட்டு நீங்கிடுச்சி: இப்ப என் மனசு நிம்மதியாயிருக்கு."
"நான் என் கல்யாணத்தைப் பத்தி கவலைப் படலைம்மா"
"பின்னே"
"செல்வாவோட நான் பழக ஆரம்பிச்சு முழுசா, இன்னும் மூணு மாசம் கூட ஆகல. ஆனா அவனை ஒரு நாள் பாக்கலைன்னா என் மனசும், உடம்பும் அப்படி துடிச்சுப் போகுது: அவன் நிலமையும் அப்படித்தான் இருக்குன்னு அவனும் சொல்றான்: அது உண்மையாத்தான் இருக்கணும். வெக்கத்தை விட்டு சொல்றேம்மா: உங்கிட்ட நான் பேசக்கூடிய பேச்சு இல்லம்மா இது: காலையில அப்படி வலியோட மருத்துவமனை கட்டில்ல துடிக்கறவன்: என்னைப் பாத்ததும் உதட்டை குவிச்சிக் காட்டறான். டாக்டர் வெளியில போன அடுத்த செகண்ட், நானும் இருப்புக்கொள்ளாமா அவன் உதட்டுல முத்தம் குடுத்தேன். அதை அவன் அம்மாவும் அப்பாவும் பாத்துட்டாங்க"
"அவங்க அம்மா திருப்பியும் அங்க பிரச்சனை பண்ணி, மாமா தன் பொறுமையை இழந்துடுவாரோன்னு பயந்துட்டு இருந்தேன்: உங்க பேரை கெடுக்கற மாதிரி நடந்துகிட்டேனேன்னு மனசுக்குள்ளேயே மருதகிட்டு இருந்தேன். ஆனாலும், என் மனசை கட்டுப்படுத்த முடியாமா, இப்ப சாயங்காலம் திரும்பி வரும் போதும், வெக்கமில்லாமா எப்படா சமயம் கிடைக்கும்ன்னு தவிச்சுட்டு இருந்து, கடைசியில அவனுக்கு திருட்டுத்தனமா ஓரு முத்தம் குடுத்துட்டுத்தான் வந்தேன்."
"வீட்டுக்கு வந்தா என் ஃப்ரெண்டு வேணி, நாலு நாளைக்கு மேல அவ அம்மா வீட்டுல அவளால தனியா தூங்க முடியலைன்னு சொல்லிட்டுப் போறா; பத்து நாளுக்குள்ள என் புருஷன் இல்லாம நான் ஏங்கிபோய்ட்டேங்கறா'
'நீயும் அப்பாவும் காதலிச்சித்தான் கல்யாணம் பண்ணிகிட்டீங்க; அவரு தப்பெல்லாம் குடிச்சுட்டு உன்னை தொந்தரவு பண்ணதுதான்; அதில்லாம நீங்க ரெண்டு பேரும் வேற எதுக்காகவும் சண்டைப் போட்டுக்கிட்டதா எனக்கு ஞாபகமில்லை: அப்படி இருக்கும் போது எனக்காக நீ அவரை அடுச்சு வெரட்டிட்டு: உன் உடம்பையும், மனசையும் இப்படி எரிச்சிக்கிட்டு இருந்திருக்கியேம்மா; அதை நெனைச்சேன், என்னால தாங்க முடியலைம்மா” சுகன்யா தன் உணர்ச்சிகளை அடக்கமுடியாமல், மீண்டும் விம்ம ஆரம்பித்தாள்.
சுந்தரி தன் மகள் பேசியதை குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டுருந்தாள். அவள் மனம் மதிழ்ச்சியில் முழுமையாக பூரித்துப் போனது. சுகன்யா பேசி முடித்து விம்மத் தொடங்கியதும், அவளை மீண்டும் தன் புறம் இழுத்து மார்புடன் தழுவிக்கொண்டு சுகன்யாவின் கன்னத்தில் ஒழுகும் கண்ணீருடன் சேர்த்து, தன் தாய்மை உணர்ச்சி பொங்க முத்தமிட்டவள், அவள் முதுகை வருடிக்கொடுத்தாள்.
"சுகன்யா கண்ணு! உன்னை நெனச்சு நான் ரொம்ப பெருமைப்படறேண்டா செல்லம். என் பொண்ணுக்கு, இன்னொரு பொம்பளையோட மன உணர்ச்சிகளையும், உடல் உணர்ச்சிகளையும் மதிக்கற பெரிய மனசு இருக்கு; நான் உன்னை சரியாகத்தான் வளர்த்திருக்திறேண்டி. நான் உன்னை ஒரு சுயநலவாதியா வளர்க்கலை. நீ உன் சுகத்துக்காக அடுத்தவங்க வாழ்க்கையை கெடுக்கமாட்ட; இன்னைக்கு இது தெரியறப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு."
"நீ சொன்ன மாதிரி நாலைஞ்சு வருவம் முன்னால வரைக்கும் கூட என் உடம்பு என்னை பாடாப் படுத்தியிருக்கு; உடம்பு சுகம் என்னான்னு நல்லா தெரிஞ்சவதானே நான்; நானும் கல்யாணமாகி, நாலு வருஷம் எந்த பிரச்சனையும் இல்லாமா, அவன் கூட சந்தோஷமா இருந்து, உன்னை பெத்துகிட்டவ தானே: அதுக்கு அப்புறம் தானே எங்க வாழ்க்கையில பிரச்சனை தொடங்குச்சு: ஆனா எப்படியோ இது வரைக்கும், என் மனசை கட்டுப்படுத்திட்டு, சோத்துல கொஞ்சம் உப்பை கம்மியா போட்டு திண்ணுட்டு, ரோட்டுல போகும் போது தலையை குனிஞ்சி நடந்து, ஆம்பிளைங்களை திரும்பி பாக்காமே என் வாழ்க்கையை வாழ்ந்துட்டேன்"
"எவன் கண்ணும் என் உடம்புல பட்டது இல்லேன்னு என்னால சொல்ல முடியாது. ஒண்ணு ரெண்டு தரம், கொஞ்சம் அழகான, ஆம்பளைங்க என்னை, கடைத்தெருல, கோவில் குளத்துல, உத்து பாத்திருக்காங்க; அப்ப என் உடம்பும் சித்த நேரம் சிலுத்து போனதை என்னால மறுக்க முடியாது."
"எத்தனையோ நாய் என் பின்னால முரட்டுத்தனமா கொலைச்சுப் பாத்துச்சுங்க; ஆனா நான் அந்த நாய்ங்க எவனையும் மனசுல நினைக்காமா, எவன் கையும் என் உடம்புல படாமா இருந்துட்டேன்னு உறுதியா உன்கிட்ட என்னால சொல்லமுடியும். இப்பல்லாம் என் மனசும் சரி, உடம்பும் சரி அந்த அளவுக்கு என்னைத் தொந்தரவு பண்ணல. மனசு மரத்துப் போச்சுன்னு வச்சிக்கோயேன்" சுந்தரி பேசுவதை நிறுத்தினாள்.
"அம்மா, மாமா சொன்னாருல்ல: தீராத கோபம் யாருக்கு லாபம்ன்னு; இங்க சென்னைக்கு வந்து, நான் தனியா இருக்க ஆரம்பிச்சதுலேருந்து, நாலு பேரை பாக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம், முகம் தெரியாத ஜனங்களோட பழக ஆரம்பிச்சதுக்கு அப்புறம், மத்தவங்க வாழ்க்கையில அவங்க அனுபவிக்கற சுக துக்கங்களையும், துயரங்களையும், நல்லது கெட்டதுகளையும் பத்தி கேள்விபட்டதுக்கு அப்புறம், என் கண்ணால பாக்கறதுக்கு பின்னாடி, என் அப்பா மேல இருந்த கோபம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சிடுச்சி. அவர் நல்லவராத்தான் இருக்கணும்ன்னு தோண ஆரம்பிச்சிடுச்சி."
"ஏன்னா நீ ஒரு தரம் அவரை தொடப்பத்தால அடுச்சதும், மாமா அரிவாளை தூக்தினதுக்கும் அப்புறம், அவர் ஒரு தரம் கூட நம்ம வீட்டுப்பக்கம், ஏன் நம்ம ஊர்லேயே அவரை நான் பாக்கல; குடிக்கறது அவருக்கு ஒரு வியாதின்னு நினைக்கிறேன்; குடிப்பழக்கத்துக்கு அடிக்ட் ஆன ஒரு மன நோயாளி அவர்"
"நான் என்ன சொல்றேன்னா, அப்பா இருக்கற இடம் உனக்கோ, மாமாவுக்கோ தெரிஞ்சிருந்தா, எங்கிட்ட சொல்லும்மா, எனக்கு அவரை ஒரு தரம் பாக்கணும்ன்னு ஆசையா இருக்கும்மா: இத்தனை நாள்லே அவர் திருந்தியும் இருக்கலாமில்லயா?"
"ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேம்மா, உனக்கு விருப்பம் இல்லன்னா, நான் அவரைப் பாக்கமாட்டேன். எனக்கு உன் மன நிம்மதிதாம்மா முக்கியம். இந்த விஷயத்துல உன் விருப்பம் தான் எனக்கு முக்தியம். உனக்கு அப்புறம்தான் எனக்கு எல்லாமே: என் அப்பா, என் வேலை: என் செல்வா, என் கல்யாணம் எல்லாமே உனக்கு அப்புறம்தாம்மா." சுகன்யா தன் முகத்தை துடைத்துக்கொண்டு தெளிவாக பேசினாள்.
"நீ உன் அப்பாவை போய் பாக்கறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல: அவன் எனக்கு புருஷன் மட்டுமில்லே; உன் அப்பாவும் கூடத்தான்: ஆனா என்னைக் கூப்பிடாதே; அவங்க அப்பா, அம்மாவுக்கு அவன் புள்ளை. எனக்காக அவன் அவங்க அப்பா அம்மாவை விட்டுட்டு என் கூட வந்தான். இப்ப அவன் தன் பெத்தவங்களோடத்தான் இருக்கான்னு நெனைக்கிறேன்"
"அஞ்சாறு வருவம் முன்னாடி உன் மாமா என் மாமனாரையும், மாமியாரையும் தற்செயலா ஒரு முறை கல்கத்தாவுல பாத்ததா சொன்னான்; அவனுக்குத்தான் ஊர் ஊரா அலையற வேலையாச்சே; அவங்க ரெண்டு பேரும், ரகுகிட்ட தங்களோட பிள்ளை, எனக்கு பண்ண கொடுமைக்கு மன்னிப்பு கேட்டாங்களாம். என்னையும் உன்னையும் நேரா ஒரு தரம் பாக்கணுமின்னு சொன்னாங்களாம். என்னைப் பாத்து மன்னிப்பு கேக்கணும்ன்னு சொன்னாங்களாம்"
"ஆரம்பத்துல எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்காத அவங்க, வயசானதால வேற வழியில்லாமா, ஆதரவில்லாமா, கல்கத்தாவுல ஏதோ வேலை செய்துட்டு இருந்த உன் அப்பாவோட போய் சேர்ந்துகிட்டாங்களாம். உன் மாமனும் ஒரு தரம் வயசானவங்க சொன்னாங்களே, அட்ரஸ் எல்லாம் குடுத்தாங்கனு அவங்களை மட்டுமாவது போய் பாத்துட்டு வரலாமான்னு என்னைக் கேட்டான். நான் வேணாம்ன்னு தீத்து சொல்லிட்டேன்."
"அவங்கக்கூட எனக்கு எப்பவும் எந்த பழக்கமோ, உறவோ இருந்ததே இல்லைம்மா. பார்க்காத, பழகாத ஒருத்தர் கிட்ட எப்படி பாசம் வரும்: அப்ப அவங்க மேல எனக்கு எந்த பாசமும் வரலை. புதுசா எதுக்கு இந்த வயசுல சிக்கல்களை வளர்த்துக்கிட்டு, அதன் மூலமா நீ பாதிக்கப்படக்கூடாதுன்னு நான் நெனைச்சேன். அப்பதான் நீ காலேஜ்ல சேர்ந்தே... ஹாஸ்டல்ல தனியா இருந்தே; யார் தொந்தரவும் இல்லாம, நிம்மதியா தூங்கி, நேரத்துக்கு எழுந்து, மனசு ஒன்றி நல்லாப் படிச்சு, ஒரு சாதாரண வாழ்க்கைக்கு மாறிட்டு இருந்த நேரம்; எந்த காரணத்தாலும் உன் மனசுல எந்த குழப்பமும், அந்த கொடுமைக்காரன் நினைவும் வந்து உன் படிப்பு கெட்டுப் போகறதை நான் விரும்பலை."
"அம்மா... நீ எனக்காக உன் வாழ்க்கையையே தியாகம் பண்ணியிருக்கேம்மா.. எப்படிம்மா இதுக்கு நான் நன்றி சொல்லப்போறேன்" சுகன்யா தன் தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். நிமிர்ந்து அவள் நெற்றியில் ஆசையுடன் முத்தமிட்டாள்.
"கண்ணு... பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசாதே... பெத்துக்கிட்ட நான்... என் கடமையைச் செய்யறேண்டி... உங்கிட்ட நான் எதையும் எதிர்ப்பாத்து இதையெல்லாம் செய்யலை; இப்ப நீ நிம்மதியா தூங்கு... நாளைக்கு நீ ஆபீசுக்கு போகணும்..."
"அப்ப நான் என் கடமையை செய்ய வேண்டாமா ம்மா உனக்கு?"
"நீ எனக்குத்தான் திருப்பி செய்யணும்ன்னு அவசியம் இல்லை"
"அப்புறம் வேற யாருக்கு செய்ய?"
"நான் உனக்கு செய்யறேன்; நீ உன் புள்ளைங்களுக்கு எந்த எதிர்பார்ப்புமில்லாமால் செய்..."
சொல்லிவிட்ட சுந்தரி மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டு சுவரைப் பார்த்தாள். அதுவரை தன் மன உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டிருந்தவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. தன் பெண் தான் அழுவதை உணர்ந்துகொள்ளாத படி, தன் கண்களில் வழியும் கண்ணீரை சத்தமில்லாமல் துடைத்துக் கொண்டாள்.
சுகன்யா வழக்கம் போல் தன் கையைத் தன் தாயின் இடுப்பில் போட்டு அவளை வளைத்துக்கொண்டாள்... சற்று நேரத்தில் அவளையும் அறியாமல் மனம் தளர தூக்கத்திலாழ்ந்தாள்.
தொடரும்...
Comments
Post a Comment