சுகன்யா தன் தந்தையின் வரவை எதிர்நோக்கி மனதில் பரபரப்புடன் ரிசப்ஷனில் உட்க்கார்ந்திருந்தாள்.
'இப்ப அப்பா எப்படி இருப்பார்? அவரால என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா? கடைசியா நான் அவரை ரெண்டாம் கிளாஸ் படிக்கும் போதுதான் பாத்தேன். இப்ப நான் வளந்து முழு பொம்பளையா ஆயிட்டேன். அவரு முகம் எனக்கு நல்லா நினைவுல இருக்கு. நான் தான் அவரை தினம் தினம் பார்த்துக்கிட்டு இருக்கேனே. சின்ன வயசுலேருந்தே அம்மாவுக்கு தெரியாம, அவரு எங்க கூட நிக்கற போட்டோவை புஸ்தகத்து உள்ளே மறைச்சு வெச்சுக்கிட்டு, அப்பப்ப எடுத்து பாக்கறேனே?'
'என் சின்ன வயசுல அப்பா உயரமா சிவப்பா இருந்தார். தலையை எப்பவும் தூக்கி வாரியிருப்பார். இப்ப அவருக்கு ஐம்பது வயசு இருக்குமா? இந்த ஆபிசுல இருக்கற ஐம்பது வயசுக்கார ஆண்கள், முக்கால் வாசி, தலை நரைச்சுப் போய் டை அடிச்சுக்கிட்டுத்தான் வர்றாங்க. அப்பாவும் டை அடுத்துக் கொண்டிருப்பாரா?'
சுகன்யாவின் நினைவில் இருக்கும் இளமைக்கால அப்பாவுக்கு மீசை திக்கா இருக்கும். அப்பா கிட்ட போனாலே எப்பவும் ஜம்முன்னு சந்தன வாசனை வரும். அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த பின் குமார் தன் மகளை ஆசையுடன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் போது, சுகன்யா அவன் பிடியிலிருந்து திணறி ஓட முயற்சி செய்வாள்.
"சுகா, அப்பாவுக்கு ஒரு முத்தா குடுடா, கண்ணுல்லே! பட்டுல்லே!" என்று குமார் தன் மகளிடம் குழந்தையாக மாறி கெஞ்சுவான். அப்பாவுக்கு முத்தம் குடுக்காமல் சுகன்யா வீட்டுக்குள் இங்குமங்கும் ஓடி அடம் பிடிப்பாள். அம்மாவிடம் அழுது முறையிடுவாள்.
"அம்மா, அப்பாவை எனக்கு முத்தா குடுக்க வேணாம்ன்னு சொல்லும்மா."
"ஏண்டா கண்ணு? அவரு நம்ம அப்பாடா. அவருக்கு முத்தா வேணும்ன்னா எங்க போவாரு? யாருகிட்ட கேப்பாரு? நீ தானே அவருக்க ஆசை பொண்ணு? அப்பாதானே உனக்கு தினம் தினம் தின்றதுக்கு பிஸ்கட், சாக்லேட் வாங்கிக் குடுக்கறாரு? நீ போட்டுக்கற மயில் பாவாடை, பட்டுப் பாவாடை எல்லாம் வாங்கி குடுக்கறது யாரு? அப்பாதானே? அப்பாக்கு நீ ஒரே ஒரு முத்தா குடுத்தா குறைஞ்சா போயிடுவே? நீ அப்பா கன்னதுல ஒரே ஒரு ஆசை முத்தா "உம்மு" குடுத்துடுவியாம்; அப்பத்தான் நீ கேக்கறதெல்லாம் அப்பா உனக்கு வாங்கிக் குடுப்பாரு" சுந்தரி தன் மகளை கொஞ்சுவாள்.
"போம்மா, நான் குடுக்க மாட்டேன். அப்பாக்கு கன்னத்துல முத்தா குடுத்தா உதட்டுல முள்ளு முள்ளாக் குத்துதும்மா. நான் அப்பா பேச்சு காய். உன் மூஞ்சு நல்லா மழா மழா இருக்கும்மா; அம்மா மேலதான் எனக்கு ரொம்ப ரொம்ப ஆசை: அப்பாக்கு மீசை வேணாம் சொல்லும்மா? பாத்தாலே எனக்கு பயமா இருக்கும்மா." குழந்தை சுகன்யா அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு அழுது அரற்றுவாள்.
சுகாவிற்கு தூங்கப் போகும் நேரத்தில் மட்டும் அப்பா கண்டிப்பாக அவள் பக்கத்தில் இருக்க வேண்டும். அப்பாவிடம் சாயந்திரம் சண்டைப் போட்டவள் இரவில் தானாக சென்று அவனுடன் சமாதானமாகி விடுவாள். குமாரின் பக்கத்தில் படுத்துக்கொண்டு தன் காலை தூக்கி அவன் மார்பில் போட்டுக்கொள்வாள்.
"அப்பா உனக்குத்தான் நெறைய நெறைய, புது புது கதை தெரியுது. அம்மாவுக்கு கதையே தெரியலைப்பா. அம்மா மக்கு அம்மா. எப்பப் பார்த்தாலும் ஆயா வடை சுட்ட கதையே சொல்லுது."
அந்த நேரத்தில் மட்டும் அப்பாவுக்கு அவன் கேட்காமலேயே முத்தம் கிடைத்துவிடும்.
"அப்பா நான் உன் பேச்சு பழம்பா... அம்மா பேச்சு காய்..." குழந்தை சுகா சிரித்துக்கொண்டே, குமாரின் மடியில் உட்க்கார்ந்து கொள்வாள். மல்லாந்து படுத்திருக்கும் அவன் மார்பில் ஏறி நின்று குதிப்பாள்.
"காலையில தலை வாரும்மான்னு எங்கிட்ட வருவேல்ல; அப்ப உன்னை உன் மூஞ்சு மேலேயே குத்தறேன் வா" சுந்தரி மனதில் மகிழ்ச்சியுடன், பெண்ணிடம் போலியாக பொருமுவாள்.
இந்த இனிமையான தருணங்கள் தினம் தினம் புத்தம் புது பூக்களாக அவர்கள் தோட்டத்தில் மலர்ந்து கொண்டிருந்தன. யார் கண் பட்டதோ? கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது. சுந்தரி இப்பவும் அப்படித்தான் வாய்க்கு வாய் சொல்லுவாள். குமார் குடிக்கு மெல்ல மெல்ல அமமையானான். அவர்களுக்குள் இருந்த இந்த கொஞ்சல், கெஞ்சல் எல்லாம் நாளடைவில் வெறும் கனவாகிப் போனது. குமார் என்னும் மரத்தின் ஒரு பக்க வேர் இலேசாக அமுக ஆரம்பித்தது. அந்த தோட்டத்தில் பூக்கள் பூப்பது குறைய ஆரம்பித்தது. வெகு நாள் வரை இதெல்லாம் சுகன்யாவுக்கு ஞாபகம் இருந்தது.
குழந்தை சுகன்யாவுக்கு ஒரு விஷயம் மட்டும் எப்போதும் புரிந்ததில்லை. தூங்கறதுக்கு முன்னே நான் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் நடுவுல படுத்துக்கறேன். காலையில எழுந்துப் பாத்தா, அப்பா பக்கத்துல அம்மாதானே படுத்துக்கிட்டு இருக்காங்க? நான் எப்படி அம்மாவுக்கு இந்த பக்கத்துல வந்துடறேன்.
இந்த நினைவு இன்று மனதில் வந்தவுடன், வளர்ந்த சுகன்யாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
குமார் குடி பழக்கத்திற்கு முழுதுமாக அடிமையான பின், அது வீட்டில் பெரிய பிரச்சனையாக உருவான பின், சுகன்யா அவன் அருகில் போவதற்கே மிகவும் பயந்தாள்.
"அம்மா, இப்பல்லாம் அப்பா மூஞ்சிலே இருந்து எப்பப் பாத்தாலும் மருந்து வாசனை அடிக்குதும்ம்மா? நான் அப்பாகிட்ட போவ மாட்டேம்மா."
"ஏம்மா அப்பா உங்கிட்டே தெனம் சண்டை போடறாரு. உன்னைத் அடுச்சு திட்டறாரு? நீ எப்பப் பாத்தாலும் அழுவறே? நீயும் அவரை திருப்பி அடிம்மா."
"நான் அப்பா பேச்சு காய்... அம்மா நாம, அப்பாவை போலீஸ்காரங்ககிட்ட பிடுச்சு குடுத்துடலாம்ம்மா?"
சுகன்யாவின் மனதில் அவள் குழந்தைக் கால எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக குமிழியிட்டன.
'அதோ உள்ள நுழையறாரே .... கிரீம் கலர் அரைக்கை சட்டை, கருப்பு கலர் பேண்ட், கூலீங் கிளாஸ்ன்னு... அவர் தானா? ஆமாம்... ஆமா... அவரேதான்... என் அப்பாதான், வந்துட்டார்.' அவளுக்கு மூச்சு வேகமாக வரத்தொடங்கியது. மார்புகள் விம்மித் ததும்பின.
'அப்பா கொஞ்சம் கூட மாறவேயில்லையே? அப்பல்லாம் நம்ம அப்பா கொஞ்சம் ஒல்லியா இருப்பார். இப்ப வயசுக்கு ஏத்த மாதிரி கொஞ்சூண்டு பூசின மாதிரி இருக்கார். காதுக்கு பக்கத்துல லேசாக நரை ஆரம்பிச்சிருக்கு.'
"அப்... அப்பா நான் இங்கே இருக்கேன்..." சுகன்யா, சட்டென தான் உட்க்கார்ந்திருந்த ரிஸப்வஷன் சோஃபாவிலிருந்து, மற்றவர்கள் தன்னை பார்ப்பதையும் பொருட்படுத்தாமல் எழுந்து, மெலிதாக கூவிக்கொண்டே குமாரசுவாமி நின்ற பக்கம் ஓடினாள்.
குமாரசுவாமி தன்னை நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்த யுவதியை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் உடல் சந்தோஷத்தால் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது.
'உண்மைதான், கல்லூரியிலே என் கூட படுச்ச சுந்தரி மாதிரி தான் இருக்கா என் பொண்ணு. அந்த காலத்துல கும்பகோணத்துல இந்த சுடிதாரெல்லாம் கிடையாது. வயசுக்கு வந்த பெண் பிள்ளைங்க தாவணிதான் கட்டுவாங்க... இல்லன்னா புடவைதான்...'
மகிழ்ச்சியில் அவர் மனம் துள்ள, தன் அருகில் வந்த சுகன்யாவை தன் இடது கையால் அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டார். அருகிலிருந்த சோஃபாவில் அவளுடன் உட்க்கார்ந்தவர், உணர்ச்சியின் மிகுதியால் ஏதும் பேசாமல் மவுனமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
"எப்படிடா கண்ணு இருக்கே? இந்த புத்தி கெட்ட மடையனை மன்னிச்சுடும்மா.. உன்னை மாதிரி பொண்ணை அம்போன்னு விட்டுட்டு இவ்வளவு நாளா, ஊரெல்லாம் அர்த்தமில்லாம சுத்திக்கிட்டிருந்தேன்..." அவர் முணுமுணுத்தார்.
"அப்பா... இந்த பேச்செல்லாம் இப்ப எதுக்குப்பா? நீங்கதான் வந்துட்டீங்களே! எனக்கு அது போதும்." சுகன்யா, சந்தோஷத்தால் மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்த குமாரின் கைகளை தன் கையில் எடுத்துக்கொண்டாள். அவருடன் நெருங்கி உட்க்கார்ந்து கொண்டாள். அதே சந்தன வாசனை தன் தகப்பனின் தேகத்திலிருந்து வந்ததை உணர்ந்தவள், தன் மனம் விகசிக்க ஆசையுடன் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
குமாருக்கு தன் அருதில் அமர்ந்திருந்த, அழகாக வளர்ந்து, அப்படியே அச்சாக தன் இளமைக் கால மனைவியைப் போலிருந்த சுகன்யாவைப் பார்க்க பார்க்க, அவருள் சந்தோஷம் திகட்டியது.
'இவ சுந்தரி எனக்கு கொடுத்த அன்புப் பரிசு. உயிருள்ள பரிசு. எங்க ரெண்டுபேரோட ரத்தத்தாலேயும் சதையாலும் ஆனவ இவ. இவளைப் பாத்ததும், இவ என்னைத் தொட்டதும்.. எனக்குள்ள இத்தனை நாளா இருந்த மன அழுத்தம், இனம் தெரியாத என் எரிச்சல், தவிப்பு எல்லாமே சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிடுச்சே? இந்த உலகமே அழகா தெரியுதே! ஆண்டவா, இந்த கணம் இப்படியே என்னைக்கும் நீடிச்சு இருக்கணும்.'
குமாரசுவாமி, ஏதேதோ பேச விரும்பினார். மனதிலிருந்த எண்ணங்கள் சொற்களாக மாறி உதட்டில் வராததால், பேச முடியாமல், அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தார்.
சுகன்யா அவர் மன நிலைமையை புரிந்து கொண்டவள் போல் "அப்பா ... பிளீஸ் பீ ரிலாக்ஸ்ட்... நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்பா... நீங்க சொல்ல நினைக்கறதை உங்க விரல்கள் எனக்கு சொல்லிடுச்சிப்பா..." என்று சொல்லி அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.
"தேங்க்ஸ்ம்ம்மா" குமாரசுவாமி ஒரு நீண்டப் பெருமூச்செறிந்தார். அவருடைய சிறு குடலை பெருங்குடல் தின்று கொண்டுருந்தது. அவருக்கு அசுரப் பசியெடுத்தது. காலையிருந்தே அவர் ஒன்றும் சாப்பிடவில்லை.
"வாங்கப்பா வெளியிலே போகலாம்... பக்கத்துல ஒரு நல்ல ஹோட்டல் இருக்கு, காலாற நடந்து போய் அங்க நிம்மதியா சாப்பிடலாம்." அவளே தன் தந்தைக்கும் சேர்த்து முடிவெடுத்தாள்.
குமாரசுவாமி சுகன்யாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டுருந்தார். அவர் மனம் மகிழ்ச்சியில் இன்னும் துள்ளிக் கொண்டிருந்தது. உடலில் ரத்தம் வேகமாக ஓடுவது புரிந்தது.
'சின்ன சின்ன விஷயங்கள்ல்ல எனக்காக, என்னை கேக்காமா, சட்டுன்னு முடிவெடுக்க என் வாழ்க்கையில ஒருத்தர் இல்லையேன்னு ஏங்கிக்கிட்டு இருந்தேன்; இனிமே நான் எதுக்கும் கவலைப் படப் போறது இல்ல. என் பொண்ணு ரொம்ப புத்திசாலி: என் தொடுதலில் இருந்தே, நீங்க சொல்ல வந்தது என்னன்னு எனக்கு புரிஞ்சிப் போச்சுங்கறா: இதுக்கு மேல எனக்கு வேற என்ன வேணும்?'
'என் மனைவி சுந்தரி இப்ப என்னப் பண்ணிகிட்டிருப்பா? அவ டீச்சரா இருக்கற ஸ்கூல்ல இப்ப மதிய உணவு வேளையா இருக்கலாம்; இப்ப அவள்ட்ட பேசலாமா? சுகன்யாவைத்தான் கேக்கணும்...' சுகா என்கிற சுகன்யா அவர் உள்ளத்தில் முழுதுமாக நிறைந்துவிட்டாள்.
நேற்றிரவு பலத்த மழை பெய்திருந்ததால், சென்னையில் இன்று வெயில் மிதமாக காய்ந்து கொண்டுருந்தது. குளிர்ந்த காற்று கடலிலிருந்து கரையை நோக்கி மெலிதாக வீசிக்கொண்டுருக்க, வானில் கரு மேகங்கள் மெல்ல மெல்ல மேற்கு நோக்கி ஊர்வலம் போய்க்கொண்டிருக்க, ஆஃபீசை விட்டு, தன் தந்தையுடன் வெளியில் வந்த சுகன்யாவுக்கு, தூரத்தில் நீல ரிப்பனாகத் தெரிந்த கடலும், மெரினா கடற்கரை சாலையும், அதை சுற்றியிருந்த இடங்களும் மிக மிக ரம்மியமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது.
சாலை ஓரத்தில், பாதசாரிகள் நடப்பதற்கு இடமில்லாமல், நடைபாதையின் மேல், தள்ளுவண்டுயுடன் நின்று பழம் விற்பவன், தண்ணீர் பாக்கெட் வாங்க சொல்லி பின்னாடியே ஓடி வரும் சிறுவன், சோப்பு, சீப்பு, சீட்டுக்கட்டு என சில்லறை சாமான்களை கூவி கூவி தலையில் கட்டுபவர்கள் யாரும் இன்று சுகன்யாவிற்கு எரிச்சலை மூட்டவில்லை; மாறாக அவர்களும், எதிரில் வருபவர்களும், ரோடில் தேவையில்லாமல் ஹாரன் சத்தத்தை எழுப்பிக் கொண்டு வேகமாக பைக்கில் செல்பவர்களும், அவள் கண்ணுக்கு மிகவும் அழகாக காட்சி அளித்தார்கள்.
'பாவம்! ஏழைங்க; வாழ வழியில்லாமத்தானே இப்படி சாலையிலே குடும்பம் நடத்தறாங்க: என்னப் பண்ணுவாங்க அவங்க: அவங்களும் நம்பளை மாதிரி வாழணும் இல்லையா?' அவர்கள் பால் அவளுக்கு அன்று எல்லையில்லா இரக்கம் பொங்கி வழிந்தது. மனதில் பெருக்கெடுக்கும் அன்புடன் அவர்களைப் பார்த்தாள்.
சுகன்யா, குமாரசுவாமியின் கையில் தன் விரல்களை கோர்த்தபடி, நெருக்கமாக அவரை இடித்துக்கொண்டு, அவருடைய உடலின் வலது புறம் தன் தோள் உரச, ஓரக்கண்ணால் பெருமிதத்துடன் அவரைப் பார்த்தவாறு நடந்தாள்.
எதிரில் வந்தவர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவரையும் நிறுத்தி "இவர்தான் என் அப்பா: நல்லாப் பாத்துக்குங்க" என உரக்க கூவ வேண்டும் போலிருந்தது அவளுக்கு.
'அப்பா ஹேண்ட்சமா, எவ்வளவு மேன்லியா இருக்கார்: அப்பா கை இரும்பாட்டம் எவ்வளவு உறுதியா இருக்கு: ஐம்பது வயசுக்கு தொப்பையே இல்லாம தன் பாடியை நல்லா மெய்ண்டெய்ன் பண்ணிக்கிட்டுருக்கார்.' சுகன்யா, அன்றைய தினத்தில், பிரிந்து போன தன் தந்தைதை மீண்டும் பார்த்த அந்த மகத்தான நாளில் தான் மிக மிக மதிழ்ச்சியாக இருப்பதாக நினைத்தாள்.
தன் மகள் வெகு இயல்பாக எந்த தயக்கமும் காட்டாமல் தன்னுடன் பேசியதும், ஆசையுடன் தன் கையை பிடித்தபடி நடக்க தொடங்கியதும், தன் வாழ்க்கையில் இத்தனை நாளாக தான் இழந்திருந்த அனைத்தையும் மீண்டும் திரும்ப பெற்று விட்டதாக நினைத்து பூரிப்படைந்த குமாரசுவாமி, மனதுக்கள்ளாகவே கடவுளுக்கு மீண்டும் மீண்டும் நன்றி சொல்லிக் கொண்டிருந்தார்.
'ஆண்டவனே! எனக்கு இது போதும்; நான் திரும்பவும் என் மகளோட வந்து சேர்ந்துட்டேன்; என் மகளாலே என் வாழ்க்கைக்கு இந்த நொடியிலேருந்து ஒரு புது அர்த்தம் கிடைக்குங்கற நம்பிக்கை எனக்கு வந்துடுத்து. எந்த குறையும் இல்லாம இப்படியே இந்த உறவு கடைசி வரைக்கும் நிலைக்கணும். என் மனைவி சுந்தரியும், பழசெல்லாம் மறந்துட்டு என்னை முழு மனசா ஏத்துக்கிட்டா, நான் உண்மையிலேயே ஒரு அதிர்ஷடசாலிதான். எனக்கு இந்த உலகத்துல இதுக்கு மேல வேற எதுவும் வேணாம்.' அவர் மனம் உரக்க அரற்றிக் கொண்டிருந்தது. தன் மகளின் கையை அவர் இறுகப் பற்றிக்கொண்டு நடந்தார்.
தந்தை தன் கையை இறுகப்பற்றியதும், அவர் முகத்தைப் பார்த்த சுகன்யா, "என்னப்பா... நான் உங்களை விட்டுட்டு எங்கேயும் ஓடிப் போயிட மாட்டேம்பா: பயப்படாதீங்க; " என்று அவரை தன் உதடுகளில் புன்முறுவலுடன் பார்த்தாள்.
"போதுண்டா செல்லம்.. உங்களையெல்லாம் விட்டுட்டு, நான் ஊர் ஊரா அலைஞ்சு திரிஞ்சதெல்லாம் போதும், நீ எதுக்காக ஓடணும்? இன்னொரு தரம் விளையாட்டுக்கு கூட நீ இப்படி பேசாதே." சுகன்யாவின் முழங்கையுடன் தன் வலது கையை கோர்த்துக் கொண்டார்.
"எந்த காரணத்துக்காவும் நானும் உங்களை திரும்ப இழக்கறதுக்கு தயாரா இல்லைப்பா."
"சுகா... உன் அம்மா எப்படி இருக்காங்கம்மா?"
"ஏம்பா... நீங்க திரும்ப திரும்ப என் அம்மா... என் அம்மாங்குறீங்க? ஒரே ஒரு தரம் என் வொய்ஃப் சுந்தரி எப்படி இருக்கான்னு உரிமையோட கேளுங்கப்பா?" சுகன்யா தன் குரலில் தாபத்துடன் பேசினாள்.
"சரிம்மா... என் சுந்தரி எப்படிம்மா இருக்கா?"
"அப்பா... உங்கதிட்ட நான் கொஞ்சம் பேசணும்... அந்த பெஞ்சுல கொஞ்ச நேரம் உக்கரலாமா" சுகன்யா நடைபாதையில் ஒரு ஓரமாக நின்றாள்.
"இனிமே உன் விருப்பம் என்னவோ அதுதான் என் விருப்பம்..."
"அப்பா... நீங்க இப்ப இப்படி சொல்லிட்டு... அப்புறம் திண்டாடப் போறிங்க."
"சுகா, நான் எனக்காக முழுசா வாழ்ந்துட்டேன். அந்த வாழ்க்கையில எனக்கு திருப்தியில்லை. இனிமே உனக்காகவும், என் சுந்தரிக்காவும் வாழ விரும்பறேன். அதுக்காக நான் திண்டாடினாலும் பரவயில்லம்மா." அவர் குரல் உறுதியாக வந்தது.
சாலையோரமிருந்த சிமெண்ட் பெஞ்சில், அவள் பக்கத்தில் நெருங்கி உட்க்கார்ந்தவர் அவள் கைகள தன் கையில் எடுத்துக்கொண்டார்.
"அப்பா... " சுகன்யா தன் தந்தை பேசட்டும் என அமைதியாக அவர் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
"சுகா... உங்கிட்ட உண்மையை சொல்றேம்மா.. அப்ப எனக்கு மன முதிர்ச்சியில்லை. கெட்ட சகவாசம்... போங்கடான்னு விலக்க முடியாத ஒரு தவறான நட்பு வட்டம்; மன உறுதி அதிகமா இல்லாத நேரத்துல நான் குடியால சீரழிஞ்சுப் போயிட்டேன். என் சுந்தரி, நான் உயிருக்கு உயிரா நேசிச்ச என் மனைவி என்னை தொடப்பத்தாலே அடுச்சாளேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன். எப்படியிருந்தாலும் அவ ஒரு பொம்பளை. ஒரு பொம்பளை கையால அடி வாங்கினது என் ஆண் ஈகோவை, ரொம்பவே காயப்படுத்திடுச்சு. அதுக்கும் மேல எங்க கல்யாணத்துல, எல்லாரும் எங்களை எதிர்த்தப்ப, என் பக்கம் நின்ன என் மச்சான் ரகு என்னை வெட்ட வந்ததை என்னால நம்பவே முடியலை. உலகமே ஒன்று சேர்ந்து என்னை ஓதுக்கிட்டதா நெனைச்சேன். ஊர்ல இருந்தவங்க என் சொந்தக்காரங்க, என் ஜாதிக்காரங்க, என்னைப் பாத்து சிரிச்சாங்க; இனி என்னைக்கும் நான் இவங்க மூஞ்சில முழிக்கறதில்லேன்னு ஒரு வீராப்பையும், வீம்பையும் என் மனசுக்குள்ள வளத்துக்கிட்டேன். அந்த ஊரை விட்டு போகணும்ன்னு முடிவெடுத்தேன். அந்த வீராப்புத்தான் என் குடிப்பழக்கத்துக்கான மருந்தா பின்னாடி வேலை செஞ்சது."
"ரெண்டு வருஷ குடிப்பழக்கம் இந்த அளவுக்கு என்னை சீரழிச்சதை நெனைச்சு உண்மையா வருத்தப்பட்டேன். தனிமையில நடந்ததை யோசனை பண்ணி அழுது இருக்கேன். கல்கத்தாவுல இருந்த ஒரு நண்பன் கிட்ட போனேன். அங்க ஒரு நல்ல வேலையைத் தேடிக்கிட்டேன். உழைப்பு: உழைப்பு: உழைப்பு: அதுல என்னையே மறந்தேன். உண்மையா உழைச்சதனால நிறைய பணம் சம்பாதிச்சேன். பணம் இருந்தது. எங்கிட்ட இளமையும் இருந்தது. பெண்கள் என்னைத் துரத்தவும் செய்தாங்க. இன்னைக்கு சுந்தரி அடிச்சா: நாளைக்கு வேற ஒருத்தி என்னை வேற ஒரு காரணத்துக்காக அடிப்பானு பெண்களை விட்டு விலகிப்போனேன்."
"சுகா, என் மனைவியை விட்டு பிரிஞ்சிருந்த இத்தனை நாள்லே, வேற எந்த பொம்பளையையும் நான் தொட்டதில்லை; ஷேர் மார்க்கெட்ல விளையாடினேன். நான் வாங்கின ஷேர் எல்லாம் கோபுரத்து உச்சிக்கு போச்சு; என் நேரம் நல்ல நேரம் அப்படின்னு சொன்னாங்க; பணம் பேங்க்ல துரு பிடிக்க ஆரம்பிச்சுது; பணத்துல எனக்கு ருசியில்ல; அன்னிய பொம்பளை மேல எனக்கு விருப்பமில்ல; குடும்பம்ன்னு சொல்லிக்க யாருமில்ல; பணத்தை வெச்சுக்கிட்டு நான் என்ன பண்றது?"
"அந்த வாழ்க்கையில, நான் தனிமையைத்தான் அதிகமா அனுபவிச்சேன். என்னை ஏன்னு கேக்க யாரும் இல்லே. ஆனாலும் நான் எந்த தப்பும் பண்ணல. உங்கம்மா குடுத்த தொடப்ப கட்டை அடி - தப்பு பண்ண எனக்கு துணிச்சல் வரலை."
"தனிமை என்னை அணு அணுவா சித்திரவதை பண்ணுச்சு. கொஞ்ச நாள் முன்னாடி, உன் தாத்தா பாட்டிக்கிட்ட என் கூட வந்து இருங்கன்னேன். நான் சம்பாதிச்ச பணத்தை பத்தி சொன்னேன். அவங்க என்னைப் பாத்து சிரிச்சாங்க; ஏம்பா சிரிக்கறீங்கன்னு எங்கப்பாவைப் பாத்துக் கேட்டேன்; 'நீ திரும்பி வந்ததுல எங்களுக்கு சந்தோஷம். என் ஜாதிக்காரன் என்னை மதிக்க மாட்டாங்கற எண்ணத்துல, உன் காதல் கல்யாணத்துக்கு நாங்க சம்மதிக்கலை. போலி கவுரவத்துக்காக, கிளி மாதிரி இருந்த அந்த பொண்ணை வேணாம்ன்னு சொன்னோம். அவளை இழுத்துக்கிட்டு போய் தாலி கட்டினியே, அவ கூடவாது ஒழுங்கா குடுத்தனம் பண்ணியா? நீ பண்ண கூத்துக்கு அவ உன்னை வீட்டை விட்டு அடிச்சு துரத்தினா? நீ ஊரை விட்டு ஓடுனே? நம்ம எனத்தவன் எல்லாம் எங்களைப் பாத்து வழிச்சுக்கிட்டு சிரிச்சான். அவ அப்பன் ஆத்தாளும் உங்க கொடுமையை பாக்க முடியாம போய் சேர்ந்தாங்க; உன் கூட வந்தவ, நீ பெத்த பொண்ணை, நெருப்பா தனியா நின்னு இன்னைக்கும் வளக்கறா. அவளைப் பாக்க பாக்க எங்களுக்கு பெருமையா இருக்கு. மனசுக்கு உண்மையை புறிஞ்சுக்கற பக்குவம் வந்துடுத்து: உடம்புல தெம்பு குறைஞ்சு போச்சு; இன்னைக்கு நம்ப ஜாதிக்காரன் எவனும் நாங்க எப்படி இருக்கோம்ன்னு ஒரு தடவை கூட எங்களைத் இரும்பிப் பாக்கலை.
டேய், நாங்க அவளை கேட்டுப் பாத்துட்டோம். எங்க சொத்தெல்லாம் என் பேத்திக்குத்தான். நீ வந்து எங்க கூட இரும்மான்னு சொல்லிப் பாத்தோம். அவ எங்களைப் பாக்க கூட மாட்டேன்னு மறுத்துட்டா. உங்கிட்ட இருக்கற இந்த பணத்தால, எங்க மருமகளையோ, எங்க பேத்தியையோ உன்னால வாங்க முடியாதுன்னு எங்களுக்கு நல்லாத் தெரியும். உன்னால முடிஞ்சா நீ அவங்க ரெண்டு பேரையும் அன்பா பேசி அவகிட்ட மன்னிப்பு கேட்டு, கூப்பிட்டுக்கிட்டு வான்னு' என்னைத் துச்சமா பாத்தாங்க. உன் அம்மா என் பெத்தவங்களையே பாக்க மறுத்துட்டான்னதும், சுந்தரியை பார்க்க எனக்குத் தைரியமில்லே. திரும்பிப் போயிட்டேன்."
"கொஞ்ச நாள்ல உன் தாத்தாவும், பாட்டியும் என் கூட வந்துட்டாங்க; உங்கம்மாவுக்கு நான் குடுத்த கண்டத்தினால எனக்குள்ள ஏற்பட்ட குற்ற உணர்ச்சியினால இப்பவும் நான் அவளை நேரா பாக்கறதுக்கு கொஞ்சம் தயங்கறேம்மா.. இப்பவும் அவ என்ன பாக்க பிடிக்காம தன் மூஞ்சை திருப்பிக்கிட்டா, என்னால அதை தாங்க முடியாதும்மா." குமாரசுவாமியின் கண்கள் கண்ணீரால் பளபளத்துக்கொண்டுருந்தது.
"அப்பா... நீங்க மனசால ரொம்ப அடிபட்டு வந்திருக்தங்கப்பா... உங்களுக்கும் அம்மாவோட துணை நிச்சயமா வேணும்பா..." சுகன்யாவின் குரல் தழுதழுத்தது.
"இப்ப நீ சொல்லும்மா... என் சுந்தரி நல்லாயிருக்காளா?" குமார சுவாமி உண்மையான கரிசனத்துடன் கேட்டார்.
"நல்லாயிருக்காங்கப்பா. கொஞ்ச நாளாவே உங்களைப் பார்க்கணுங்கற ஆசை அம்மா மனசுல இருந்துட்டு இருக்கு. ஆனா அதை வெளிய சொல்லாம மனசுக்குள்ளேயே வெச்சு புழுங்கறாங்க. அதுதான் ஏன்னு தெரியலை"
"எல்லாம் என்னால வந்ததுதாம்மா... எல்லாத்துக்கும் மேல மனுஷங்களுக்கு இருக்கற ஈகோ இருக்கே அது தான் அவங்களோட முதல் எதிரி. உன் அம்மாவுக்கும் ஈகோ இருக்கறது சகஜம்தானே? குமாரசுவாமி தப்பு பண்ணான். அதனால அவன்தான் திரும்பி எங்கிட்ட வரணும்ன்னு உன் அம்மா நினைக்கிறா: அவ நினைக்கறதுலேயும் தப்பு இல்ல!" அவர் குரலில் வருத்தம் தொனித்தது.
"அப்பா இப்படியெல்லாம் பேசாதீங்கப்பா... அம்மா அப்படியெல்லாம் நினைக்கலப்பா..."
"ஒரு குடும்பத்துல இருக்கற ஒரு தனி மனிதனின் தவறான நடத்தை, அந்த குடும்பத்துல இருக்கற மத்த உறுப்பினர்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதிக்கும்ங்கறதுக்கு நான் ஒரு நல்ல உதாரணம். இது அப்ப எனக்கு புரியல. அன்னைக்கு குடிக்கறது என் சுதந்திரம்ன்னு நெனச்சேன்; நான் குடிக்கறதுல என் மனைவி ஏன் தலையிடணும்ன்னு யோிச்சேன். என்னுடைய சுதந்திரம்ன்னு நான் நெனைச்சது, என் மனைவி, மகளோட வாழ்க்கையை கணிசமான அளவுல பாதிச்சு இருக்குன்னு அப்புறமா புரிஞ்சுது. இதுக்காக நான் ரொம்ப வருத்தப்படறேன். ஆனா இப்ப வருத்தப்பட்டு என்னப் பண்றது?"
"பரவாயில்லப்பா... நடந்தது நடந்து போச்சு... நீங்க உங்க தவறை உணர்ந்து திரும்பி வந்துட்டீங்க... எப்பப்பா வீட்டுக்கு வரப் போறீங்க?"
"நீ என்னை சுலபமா ஏத்துக்கிட்டே... ஆனா உன் அம்மா.. சாரிடா செல்லம்... என் மனைவியோட மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியலையே?"
"அப்பா, நேத்து ராத்திரி, தூங்கிக்கிட்டு இருந்த நான், நடுவுல திடீர்ன்னு விழிச்சு எழுந்து பார்க்கிறேன், அம்மா கொட்டற மழையில நனைஞ்சுகிட்டு நின்னாங்க; ராத்திரி ரெண்டு மணி: அவங்க உடம்பு நடுங்கிட்டு இருக்கு: உள்ளே வான்னு இழுத்துக்கிட்டு வந்து காஃபி போட்டுக்கொடுத்தேன். தலையை துவட்டி விட்டேன். புதுசா ஒரு நைட்டியை கொடுத்து போடச் சொன்னேன். ஏம்மா இப்படி பண்றேன்னு கேட்டேன்; என் உடம்புலயும், மனசுலயும் இருக்கற புழுக்கம் குறையட்டும் - அப்படின்னாங்க. அம்மா, உனக்கு உன் புருஷன் ஞாபகம் வந்திடுச்சி: என் கிட்ட பொய் சொல்லாதேன்னு கத்தினேன். அம்மா ஒண்ணும் பேசலை"
"சுகா... உங்க அம்மாவுக்கு மழைன்னா ரொம்ப பிரியம்ம்மா... எப்ப மழை பேஞ்சாலும்... மழையில கொஞ்ச நேரம் போய் நனைஞ்சுக்கிட்டு நிப்பா... இது அவளுடைய வழக்கம்மா... ஆனா ராத்திரி ரெண்டு மணிக்கு இப்படி பண்ணான்னா... அவ மனசு ரொம்ப நொந்து போயிருக்கான்னு நினைக்கிறேன்."
"அதுதாம்ப நிஜம்... அம்மா, என்னை மாமாவோட துணையோட, படிக்க வெச்சு, பரிட்சை எழுத வெச்சு, ஒரு வேலையை வாங்கற அளவுக்க என்னை எல்லாவிதத்துலயும் மோட்டிவேட் பண்ணி, ஒரு நல்ல பொண்ணா ஆக்கிட்டாங்க; நானும் அவங்களை விட்டுட்டு இப்ப தனியா வந்துட்டேன்; இப்ப அவங்க தனிமை அவங்களை கொல்லுதுப்பா. அதுக்கும் மேல அம்மா மெனோபாஸ் ஸ்டேஜ்க்கு வந்துட்டாங்கப்பா: இப்ப உங்க அருகாமை அவங்களுக்கு அவசியமா தேவைப்பா. நான் சொல்றதை புரிஞ்சுக்கங்கப்பா..." சுகன்யா விசிக்க ஆரம்பித்தாள்.
"அழாதடா கண்ணு... எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்மா; உன்னை நிஜமாவே நல்லபடியா, ஒரு நல்ல இதயமுள்ள பொண்ணா வளர்த்திருக்காம்மா என் சுந்தரி..."
"நாலு நாள் முன்ன உங்களைப் பத்திக் கேட்டேன் ... எங்கப்பா எங்க இருக்காரு? உனக்கு எதாவது தெரியுமான்னு? அதுலேருந்து அம்மாவுக்கு தினமும் ராத்திரில உங்களை நினைச்சுக்கிட்டு அழுவறதுதான் வேலையா போச்சு. நேத்து கூட உன் அப்பாவை நீ பாக்கறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னாங்க. உன் அப்பாவை பாக்கறதுக்கு உனக்கு முழு உரிமையிருக்குன்னு சொன்னாங்க; அப்பவே நான் நீங்க எங்க இருக்தீங்கன்னு கண்டுபிடிச்சு உங்களை அவங்க முன்னாடி கொண்டு போய் நிறுத்தனும்ன்னு முயுவு எடுத்தேன்; ஆனா கதையில நடக்கற மாதிரி... சினிமா, சீரியல்ல வர்ற மாதிரி.. நீங்க காலையில எனக்குப் போன் பன்றீங்க... காலையிலேருந்து நடக்கறது எல்லாத்தையும் என்னால நம்பவே முடியலைப்பா.. ரொம்ப விசித்திரமா இருக்கு. ஒருத்தர் வாழ்க்கையில இப்படியெல்லாம் நடக்குமான்னு இருக்கு."
"நேரம் வந்தா எல்லாம் தன்னால கூடி வருண்டா செல்லம். இதுக்கு மேல உன்னை திருப்தி படுத்தற ஒரு பதிலை என்னால சொல்ல முடியாது."
"சரிப்பா... இப்ப நாம வீட்டுக்கு போகலாம் வாங்க; எனக்கு என் அம்மா திரும்பவும் உங்களோட சந்தோஷமா இருக்கறதைப் பாக்கணும்."
"என் ஒய்ஃப் என்னை வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடுவாளான்னு எனக்குத் தெரியலையேம்ம்மா"
"அப்பா... ஏம்பா பெரியவங்க நீங்கல்லாம் இப்படி பிடிவாதமா இருக்கீங்க; எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு; நீங்க ஏன் குடிக்கறீங்கன்னுதானே அம்மா கேட்டாங்க: அதுக்கு நீங்க அவங்களை அடிச்சங்க: உதைச்சங்க: உங்களுக்காக தன்னோட அப்பா, அம்மா, எல்லா சொந்தங்களையும் விட்டுட்டு உங்க கூட வந்தவங்க, திரும்பி அவங்க கிட்டவும் போக முடியாமா, முழுசா ரெண்டு வருவும் உங்க கிட்ட கஷ்டப்பட்டாங்க; அவங்க சம்பாதிச்ச பணத்தையும் நீங்க குடிக்கறதுக்கு கேட்டப்ப, பதில் சொல்லாம குடுத்தாங்க; ஆனா கடைசியில நீங்க என்னையும் அடிச்சதனால, அதைப் பொறுத்துக்க முடியாம உங்களை திருப்பி அடிச்சிட்டாங்க; என் மாமா உங்களை வீட்டை விட்டு வெரட்டினார். எங்கம்மாவுக்கு இருந்த ஒரே ஆதரவு அவர்தானேப்பா"
அப்பா, அவங்க ரெண்டு பேரும் பண்ணது சரின்னு நான் வாதாடலை. ஆனா நம்ம குடும்பம் உடைஞ்சதுல உங்களுக்கு பங்கு அதிகம்ன்னு நான் ஃபீல் பண்றேன். இந்த ஒரு குறையைத் தவிர வேற எந்தக்குறையும் உங்கக்கிட்ட இருந்ததா என்னால சொல்ல முடியாது. நீங்களும் என் அம்மாவுக்காக உங்க அப்பா, அம்மா, உங்க உறவினர்களை விட்டுட்டு வந்தீங்க: அம்மாவையும், என்னையும் எல்லாவிதத்துலயும் சந்தோஷமா வெச்சிட்டு இருந்தங்க. அம்மாவுக்கு என் மாமா துணையிருந்தார். உங்க கூட யாருமே இல்லை. நீங்க தனி ஆளா அலைஞ்சீங்க: அதை நெனைச்சு நான் எத்தனை தரம் தனியா அழுது இருக்கேன் தெரியுமா? ஆனா உங்க குடிப்பழக்கம் உங்களுடைய மத்த நல்ல குணத்தையெல்லாம் குழி தோண்டிப் புதைச்சிடுச்சிப்பா." சுகன்யா விம்ம ஆரம்பித்தாள்.
"அழாதேடா கண்ணு... ப்ளீஸ்... நீ இப்ப அழறதைப் பாத்தா நான் சுத்தமா உடைஞ்சிடுவேன்..." அவர் சுகன்யாவின் கண்களை துடைத்தார். குமாரசுவாமியின் கண்களும் கலங்கி குளமாகியிருந்தது.
"நான் பேசினது உங்க மனசை புண்படுத்தியிருந்தா என்னை மன்னிச்சுடுங்கப்பா..." தன் தகப்பனின் புறங்கையில் மென்மையாக முத்தமிட்டாள் சுகன்யா. பின் அவரைப் பார்த்து கலங்கிய கண்களுடன் சிரித்தாள்.
"சரிடா சுகா... நான் உன் கூட வீட்டுக்கு வரேன்."
"தேங்க்ஸ்ப்பா... கண்டிப்பா என் அம்மா உங்களை உள்ள வாங்கன்னுதான் கூப்பிடுவாங்கப்பா... ஏன் வந்தேன்னு நிச்சயமா கேக்கவே மாட்டாங்க... என் உள்ளுணர்வு சொல்லுதுப்பா: என் உள்ளுணர்வு கண்டிப்பா தப்பா போகாதுப்பா: எனக்காக, உங்க பொண்ணுக்காக: உங்க ஈகோவை விட்டுக் குடுத்துட்டு, நடந்ததையெல்லாம் சுத்தமா மறந்துட்டு, நீங்கதான் அந்த முதல் அடியை எடுத்து வெச்சு வீட்டுக்கு வாங்களேன். நாம எல்லாம் திரும்பவும் ஒண்ணா சந்தோஷமா இருப்போம்.. நான் முதல்ல போய் என் தாத்தா பாட்டியையும் பார்க்திறேம்பா." நீளமாக பேசிய சுகன்யா தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். குமாரசுவாமியின் கை தன் மகளின் தலையை வருடிக்கொண்டுருந்தது.
தொடரும்...
Comments
Post a Comment