முழு தொடர் படிக்க செல்வா, அரை மணி நேரமாக சுகன்யாவிடம் பேசுவதற்காக செல்லில் முயன்று கொண்டிருந்தான். தன் தாய், தங்கள் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்த விஷயத்தை அவளிடம் சொல்ல வேண்டும் என அவன் துடித்துக்கொண்டிருந்தான். ஆனால் அவனால் அவளுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவளை தொடர்பு கொள்ள முயன்ற ஒவ்வொரு முறையும் "அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியா" என்ற செய்தி தான் அவனுக்கு கிடைத்துக் கொண்டிருந்தது.
'இன்னைக்கு திங்கள் கிழமை. வெள்ளிக்கிழமையே சுகன்யாவோட அம்மா ஊருக்குத் திரும்பி போயிருக்கலாம். அப்ப இன்னைக்கு சுகன்யா ஆஃபீசுலதானே இருக்கணும். அப்புறம் ஏன் அவளை காண்டாக்ட் பண்ண முடியலே?'
'ஆஃபீஸ் லேண்ட் லைன்க்கு பண்ணலாம். ஆனா அந்த சனியன் புடிச்ச சாவித்திரிதான் முதல்ல போனை எடுப்பா. அதுக்கப்புறம் அவ கேள்விக்கு நம்பளால பதில் சொல்லமுடியாது.'
'நம்ம ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ்ல எவனுக்காவது போன் பண்ணி சுகன்யாவை கூப்பிடச் சொல்லலாம். எனக்கு திரும்பவும் சென்னைக்கு போஸ்டிங் ஆயிடுச்சின்னு தெரிஞ்சதுலேருந்து "பார்ட்டி குடு... பார்ட்டி குடுன்னு" ஒரே காண்டா இருக்காணுங்க. குடிகாரப்பசங்க; உன் ஆள் கூட நீ பேசறதுக்கு நடுவுல நாங்க என்ன மாமாவான்னு கிண்டல் பண்ணிச் சிரிப்பானுங்க.'
'எல்லாத்துக்கும் மேல அவனுங்க மூலமா சுகன்யாவை கூப்பிட்டா, நம்ப வீட்டு சிங்காரி நம்ப மேலேயே எகிறி குதிப்பா. சுகன்யா என்ன மூடுல இருப்பான்னு தெரியாது. அவனுங்க எதிரிலேயே என் மேல எரிஞ்சு விழுந்தாலும் விழுவா. 'என்ன மாப்ளே, உனக்கும் உன் ஆளுக்கும் நடுவுல சண்டையா... புட்டுக்கிச்சா... அப்படின்னுட்டு கலாய்ப்ப்ஆனுங்க. உடனே பேஸ்புக்ல, "செல்வாவுக்கும் சுகன்யாவுக்கும் நடுவுல ரப்சர்ன்னு" ஸ்டேட்டஸ் போட்டுடுவானுங்க; அப்புறம் ஊரு பூரா கேக்கறவனுக்கு பதில் சொல்லி மாளமுடியாது.'
'ஒரு பேண்ட் சட்டையோட என் வீட்டுக்கு வந்துடு; மீதியை நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டுப் போனவ, அதுக்கப்பறம் ஆஸ்பத்திரி பக்கம் எட்டிப் பார்க்கவேயில்லை. மீனா கூட கேட்டா.. "என்னடா உன் ஆளை காணவே காணோம்? திருப்பியும் உங்களுக்குள்ள எதாவது சண்டையான்னு" கிண்டல் பண்ணி சிரிச்சா?'
'என் வீட்டுக்கு வந்து "வீட்டோட மாப்பிள்ளையா" இருன்னு சொன்னாளே? அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளுக்கு சோறு போட எனக்கு யோக்யதை இல்லயா? அவ எப்படி என்னை அந்த மாதிரி சொல்லலாம்?'
'சுகன்யா சொன்னதைக் கேட்டதும், சொந்த கால்ல நின்னு சம்பாதிக்கிற என்னைப் பாத்து இப்படி சொல்லலாமான்னு, எனக்கு எரிச்சல் வந்தது உண்மைதான். அந்த எரிச்சல்லே முழுசா ஒரு நாள் அவளுக்கு போன் பண்ணல. அதுவும் வாஸ்தவம்தான். மறு நாள் பண்ணணும்ன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன். மறுநாள் என்னைப் பாக்கறதுக்கு என் சித்தப்பா, சித்தி அவங்க பசங்க எல்லாம் வந்திருந்தாங்க. அதனால அவகிட்ட பேச முடியாமப் போச்சு. அதுக்காக சுகன்யாவும் பிடிவாதமா இப்படி எனக்கு போன் பண்ணாமலே இருந்தா எப்படி?'
'அவளா போன் பண்ணுவான்னு இருந்தது தப்பா போச்சே? இந்த தடவை சுகன்யாவும் ரொம்ப வீம்பாத்தான் இருக்கா. நான் ஆஸ்பத்திரியிலேருந்து வீட்டுக்கு வந்தாச்சான்னு கூட ஒரு வார்த்தை கேக்கலையே? நான் பாண்டிச்சேரிக்கு போனப்ப கூட நான் அவளுக்கு போன் பண்ணல. அப்பவே என் மேல அவளுக்கு ரொம்ப கோபம். ரெண்டு நாள் பொறுத்துப் பாத்துட்டு அவதானே எனக்கு போன் பண்ணா? இப்பவும் அப்படியே ஆகிப் போச்சு.'
அவ தினம் தினம் ஆஃபீஸ்லேருந்து என்னை ஓடி வந்து பாத்தாளே? நான் "ஐ லவ் யூ சுகு"ன்னு ஒரு தரம் போன் பண்ணிச் சொல்லியிருக்கலாம். "எப்படி இருக்கே சுகுன்னு' ஒரு வார்த்தைக் கேட்டிருக்கலாம். நான் ஒரு பைத்தியக்காரன். ஒரு அஞ்சு நிமிஷம் அவகிட்ட ஆசையா பேசக் கூட என்னால முடியலன்னா, தப்பு என்னுதுதானே? தப்பு என் பக்கம் இருக்கும் போது அவளைச் சொல்லி என்ன பிரயோசனம்.'
'நான் என்னப் பண்ணுவேன்? ஆஸ்பத்திரியில இருந்தப்ப அம்மாகிட்ட எங்கக் கல்யாணப் பேச்சை பத்து தரம் எடுத்துத்தான் பார்த்தேன். அம்மா பிடிகொடுத்துப் பேசலை. நம்ம கல்யாணத்தைப் பத்தி என்ன முடிவு எடுத்தேன்னு கேட்டா, என்ன பதில் சொல்றதுன்னு யோசனைப் பண்ணிக்கிட்டே இருந்துட்டேன். அப்பா கூட கேட்டார். "எங்கடா செல்வா சுகன்யாவை காணோம்? அவ ஆஸ்பத்திரிக்கு கட்டின அட்வான்ஸ் பணத்தை இருப்பிக் கொடுக்கணும்டா; இல்லன்னா அவங்க வீட்டுல நம்பளைப் பத்தி தப்பா நினைச்சுக்கப் போறாங்கன்னு சொன்னாரு"
செல்வாவின் மனது பலவித எண்ணங்களால் தடுமாறிக்கொண்டிருந்தது. சட்டென அவன் மண்டையில் பொறி தட்டியது.
'சுகன்யாவோட ஃப்ரெண்ட் வித்யாவுக்கு போன் பண்ணா என்ன? வித்யா சுகன்யாவோட வொர்கிங் ரூம்லதானே உக்காந்து இருக்கா. அவளுக்கு எங்க காதல் விஷயமெல்லாம் நல்லாத் தெரியும்'
உடனே அவளுக்கு ஃபோன் செய்தான்.
"வித்யா மேடம், நான் செல்வா பேசறேன்?"
"ஆ ஹாங் ... செல்வா! எப்படியிருக்கே செல்வா!.... இப்ப உன் உடம்பு பரவாயில்லயா? ஹாஸ்பெட்டலேருந்து வீட்டுக்கு வந்திட்டியா?"
"அயம் ஓ.கே... மேடம்... நான் வீட்டுக்கு வந்துட்டேன். சாரி நான் உங்களை உங்க பர்சனல் மொபைல்கு கால் பண்ணி டிஸ்டர்ப் பண்றேன். சுகன்யா பக்கத்துல இருக்காளா? கொஞ்சம் கூப்பிடுங்களேன்."
"என்ன செல்வா இது? நீங்க என்ன வெச்சு காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலயே?"
"வித்யா மேடம், உங்க கிட்ட நான் காமெடி பண்ணுவேனா? எனக்கு சுகன்யாகிட்ட கொஞ்சம் அவசரமா பேசணும். அவ செல்லுல திரும்ப திரும்ப அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியான்னு வருது. அதனாலத்தான் நான் உங்களைத் தொந்தரவு பண்றேன்."
"இதுல தொந்தரவு என்ன இருக்கு? ஆனா சுகன்யா, பத்து நாள் லீவுல, அவங்க அம்மாகூட, அவங்க ஊருக்கு - அதாம்பா - கும்பகோனம் போயிருக்காளே; உனக்குத் தெரியாதா இது?" அவள் குரலில் ஆச்சரியம் அப்பட்டமாகத் தெரிந்தது.
"ஏன்? இப்ப எதுக்கு அவ கும்பகோணத்துக்கு போயிருக்கா?"
"நல்லாருக்கு செல்வா நீ பேசறது. சுகன்யா உன் ஆளு; உன் ஸ்வீட் ஹார்ட்; நீங்க ரெண்டு பேரும் சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க; அவ ஊருக்குப் போனது உனக்கேத் தெரியலை: எங்கப்போனா? ஏன் போனான்னு என் கிட்ட கேக்கறே? இது எப்படி இருக்கு?" வித்யா, பதினாறு வயதினிலே ரஜினி மாதிரி நொடித்துக்கொண்டு சிரித்தாள்.
"ம்ம்ம். சுகன்யா ஊருக்குப் போகணும்ன்னு சொல்லிக்கிட்டிருந்தா: ஏதாவது அவசர வேலையா சட்டுன்னு போயிருக்கலாம். ஆனா அவ எப்ப கிளம்பிப் போனான்னு எனக்குத் தெரியாது?" செல்வா தன்னிடம் குரல் குழறி அசடு வழிகிறானென்று வித்யாவுக்கு நன்றாகப் புரிந்தது. சுகன்யா தன்னிடம் சொல்லாமல் ஊருக்குப் போனது அவனுக்கு சற்றே அதிர்ச்சியாக இருந்தது.
'சுகன்யா எனக்கு போன் பண்ணல; பிடிவாதமா இருக்கான்னு நினைச்சேன்; ஆனா இப்ப ஊருக்குப் போயிருக்கா: அதைக்கூட எங்கிட்ட சொல்லலை. அப்படி என்ன அவளுக்கு என் மேல கோபம்?' மனதுக்குள் குழம்பினான்.
"செல்வா, உங்க கல்யாண விஷயம் எவ்வளவு தூரத்துல இருக்கு?" வித்யா கரிசனத்துடன் வினவினாள்.
"உங்களுக்குத்தான் தெரியுமே.. வீட்டுல என் அம்மாவை சரிக்கட்டிக்கிட்டு இருக்கேன். ஏறக்குறைய முடிஞ்ச மாதிரிதான்."
"சீக்திரமா ஒரு முடிவுக்கு வா செல்வா... எங்களுக்கெல்லாம் நல்ல கல்யாண சாப்பாடு போடு; சுகன்யா மனசால ரொம்பவே தவிச்சுப் போயிருக்கா. எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருக்கறவ... இப்ப சிடுசிடுன்னு ஆயிட்டா."
"ம்ம்ம்ம்..."
"சுகன்யாவை யாரோ பொண்ணு பார்க்க வரதா கேள்விப்பட்டேன். பையன் பெங்களூர்ல ஐடியில வேலை செய்யறானாம். அவளுக்கு தூரத்து உறவுன்னு நெனைக்கிறேன். அவனுக்கு வருஷத்துக்கு பத்து லட்சம் பேக்கேஜ்னு, சொன்ன மாதிரியிருந்தது. சுகன்யா, அவங்க அம்மா கூட பத்து நாள் லீவுல நேட்டிவ்க்கு போனது இதுக்காகத்தான் இருக்குமோ? என்ன நடக்குதுன்னு உனக்கும் தெரியலைங்கறே?" வித்யா மெல்லிய குரலில் பேசினாள்.
'இது என்ன வித்யா ஒரு புது விஷயத்தை சொல்றா. இதுல எவ்வளவு உண்மை? ஆனா வித்யா நல்ல மாதிரி. மத்தவங்க மாதிரியெல்லாம் வீணா "குசுகுசு" பேசறவ இல்ல. இவ சொன்னதுலே கொஞ்சமாவது விஷயம் இருக்கும். என் அம்மா எங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்ட சந்தோஷமான விஷயத்தை சுகன்யாவுக்கு சொல்லணும்ன்னு நான் துடிச்சிக்கிட்டிருக்கேன். வித்யா ஒரு புத்தம் புது பிட்டு போடறாளே? அப்பா சொன்ன மாதிரி "என் காதல் நாடகத்துல" ஒரு புது ஆக்டர்; ஒரு புது சீன்.' செல்வாவின் தலைக்கு ரத்தம் குப்பென ஏறியது. அவன் நாக்கு உலர ஆரம்பித்தது. அவன் மனதின் எங்கோ ஒரு மூலையில் சுரீரென இனம் தெரியாத சினம் தலை தூக்கியது.
"வித்யா மேடம் உங்களுக்கு இதெல்லாம் யார் சொன்னது?"
"யார் சொன்னாங்கன்னு கேக்காதே செல்வா; உனக்கு அதுவா முக்கியம்? நான் சொன்ன விஷயம் உண்மையா? இது தானே முக்தியம்."
"வித்யா சூடிகையாகப் பேசினாள்"
'அய்யோ. என்னப் பொண்ணு இவ? எல்லாப் பொம்பளைங்களும் இப்படித்தான் இருக்காளுங்க; நேரம் காலம் தெரியாமா இவளும் என் உயிரை எடுக்கிறா? என்னை பேச்சுல மடக்கிட்டதா நெனைச்சு சந்தோஷப்படறா. நான் ஒரு புத்தி கெட்டவன் சுகன்யாவைப் பத்தி ஏன் இவகிட்ட போய் கேட்டேன்?'
"அப்புறம் ... செல்வா.."
"வேற ஓண்ணும் இல்லை மேடம்.. நீங்க சொல்ற விஷயம் எனக்கு நிஜமாவே தெரியாது."
"செல்வா, எனக்கும் முழு விவகாரம் தெரியாது. எனக்குத் தெரிஞ்சதை, நான் கேள்விப்பட்டதை உனக்கு சொல்லிட்டேன். பொண்ணுன்னு இருந்தா நாலு பேரு அவளைப் பாக்கறதுக்கு வரத்தான் செய்வாங்க; அதுல ஒண்ணும் தப்பு இல்லே. சுகன்யா என்னப் பண்ணுவா? வீட்டுல சொல்றதை கொஞ்சமாவது அவ கேட்டுத்தானே ஆகணும். உன்னை மாதிரி ஆம்பளை சட்டுன்னு ஒரு முடிவுக்கு வந்தாத்தானே?
பொம்பளையா பொறந்தவ, வயசு காலத்துல, கல்யாணம் முடியற வரைக்கும், அவளுக்கு இவ்டம் இருக்கோ இல்லையோ: இப்படி வர்றவன் போறவன் முன்னாடி உடம்புல பட்டுப்புடவையை சுத்திக்கிட்டு நின்னுதான் ஆகணும்! மிஞ்சி மிஞ்சிப் போனா என்ன ஆயிடும்?. கடைசியா அந்த பையனை எனக்குப் பிடிக்கலைன்னு சொல்லப்போறா அவ்வளவுதான்.
நீ ஒண்ணும் உன் மனசை போட்டு குழப்பிக்காதே? அவ இருபத்து நாலு மணி நேரமும் உன்னைத்தான் மனசுல நினைச்சுக்கிட்டு இருக்கா. இது எனக்கு நல்லாத் தெரியும்."
"ம்ம்ம்ம்" செல்வா சுரத்தில்லாமல் முனகினான்.
"சீக்திரமா, நீ ஆகவேண்டிய வேலையைப் பாரு. நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே; அவ நல்லப்பொண்ணு.. கோட்டை விட்டுடாதே. அவ்வளதான் சொல்லுவேன். சுகன்யா எனக்கு போன் பண்ணால், நான் அவளை உடனே உன்கிட்ட பேச சொல்றேன். ஓ.கே. வா? சாவித்திரி என்னைக் கூப்பிடறா." வித்யா வினயமாக பேசி லைனை கட் பண்ணினாள்.
'வித்யா சொன்னது உண்மையா இருக்கலாமோ? அதனாலத்தான் சுகன்யா சொல்லாமா கொள்ளாமா ஊருக்குப் போயிட்டாளா?' செல்வாவுக்கு ஒரு வினாடி தலை சுற்றுவது போலிருந்தது.
'இப்ப நான் என்னப் பண்றது? அவ நம்பரும் ரீச் ஆகித் தொலைக்கலை. சுகன்யாகிட்ட எப்படிப் பேசறது? பேசினாலும் இந்த விஷயத்தை என்னன்னு கேக்கறது?' செல்வாவின் நெற்றி நரம்புகள் புடைத்துக்கொண்டிருந்தன. ஒரு வினாடி யோசித்தான்.
'சுகன்யாவை எவனோ பொண்ணு பாக்க வர்றான்னு தெரிஞ்சதும் எனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது? என் ஆளை, எவனோ ஒருத்தன், கல்யாணம் பண்ணிக்கணுங்கற நோக்கத்துல, எப்படி பாக்க வரலாம்? அவன் அவளுக்கு சொந்தமாவே இருக்கட்டுமே? அவங்க அம்மாவே சொல்லியிருந்தாலும், சுகன்யா இதுக்கு எப்படி ஒத்துக்கிட்டா?' வெறுப்புடன் அவள் நம்பரை மீண்டும் தன் செல்லில் அழுத்தினான்.
"நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்சமயம் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார். சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொள்ளவும்."
செல்வாவுக்கு பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது.
தொடரும்...
என்ன சகோ திரும்ப சண்டையை உருவாக்கிடாதீங்க
ReplyDeleteporumai nanba ena nadakuthunu papom
Delete