காதல் பூக்கள் 62
'இவன் அப்பா அம்மா இவனுக்கு எவ்வளவோ சொல்லி சொல்லிப் பாத்து, இவன் தலையில தண்ணித் தெளிச்சுவிட்டுட்டாங்க; என் அப்பாவும் அம்மாவும் எவ்வளவோ தூரம் புத்தி சொன்னாங்க; எதுக்காவது அசைஞ்சு குடுக்கறானா? இல்லே; இதெல்லாம் திருந்தற ஜென்மம் இல்லன்னு இவங்களும் விட்டுட்டாங்க;'
'செல்வா மட்டும் என்னப் பண்ணுவான்? செல்வா பேச்சை இவன் ஏன் கேக்கப் போறான்? ஒரு நாள் ரெண்டு நாள் பழக்கமா இவங்க ரெண்டு பேருக்குள்ள; இருபது வருஷப் பழக்கம். அந்த உரிமையில செல்வா குடிக்காதேடான்னு சொன்னா அவனை மதிக்கறதேயில்லை.'
'இந்த சீனு யார் பேச்சையும் கேக்கறது இல்லே? இவனை அதட்டி கேக்கறதுக்கு யாருமே இல்லையா? நான் கேக்கறேன் இன்னைக்கு! ம்ம்ம்.'
'மீனா, நீ எந்த உரிமையில அவனை கேக்கப்போறே?'
'இந்த கேள்விக்கு இப்ப இந்த நிமிஷம் என் கிட்ட பதில் இல்லே; ஆனா இவனை இந்த குடிப்பழக்கத்துலேருந்து விடுவிக்கணும்ன்னு எனக்கு தோணுது! இவன் குடிச்சா எனக்கென்னன்னு என்னால பேசாம இருக்கமுடியலை. இவனை ஒரு நல்ல மனுஷனா பாக்கணும்ன்னு எனக்கு ஆசையா இருக்கு.'
'ஊர்ல எவ்வளவோ பேர் குடிக்கறாங்க, குடிச்சுட்டு ரோட்டுல விழுந்து கிடக்கறாங்க; அவங்களை எல்லாம் பாத்தா எனக்கு ஒரு அருவருப்புத்தான் வருது. சாதாரணமாக குடிச்சுட்டு விழுந்து கிடக்கறவனை பாத்தா நான் ஒதுங்கி போய்க்கிட்டே இருக்கேன். இவன் குடிச்சுட்டு உளர்றதைப் பாத்தா மட்டும், என் மனசுக்குள்ள ஏன் இவ்வளவு கோபம் வருது? இவன் யாரு? நான் யாரு? இவனுக்கும் எனக்கும் என்ன உறவு? எதுக்காக நான் அனாவசியமா கோபப்படறேன்? இவனோட குடிப் பழக்கத்தைப் பாத்து, இவன் கிட்டவும் அருவருப்புத்தானே வரணும்? அருவருப்புக்கு பதிலா இவனைத் திருத்தணுங்கற எண்ணம் எனக்கு ஏன் வருது?'
"ஹாய் மீனா டார்லிங், இன்னும் நீ தூங்கலையா?" சீனு அவளைப் பார்த்து சிரிப்பதாக நினைத்து, தன் வாயை நீளமாக திறந்த முதலையைப் போல் இளித்தான்.
அவள் பதில் எதுவும் சொல்லாமல் தன் கடுகடுக்கும் முகத்தால், அவனை முறைத்துவிட்டு, மறுபுறம் திரும்பிகொண்டதும், 'போச்சுடா, இன்னைக்கு இவ தன் கையால எனக்கு சோறு போடமாட்டா; அதுமட்டுமில்லே; மீனா நிச்சயமா இன்னைக்கு எனக்கு ஒரு லட்சார்ச்சனை பண்ணப் போகிறாள்' என்பது மட்டும் அவனுக்கு நன்றாகவே புரிந்துவிட்டது.
"மீனா கண்ணு; ஒரு திளாஸ் தண்ணி கிண்ணி குடுடி: ரொம்பத் தாகமா இருக்கு" சீனு அவளிடம் குழைந்தான்.
"அடிச்சுட்டு வந்து இருக்கற தண்ணி போதாதா? இந்த வீட்டுல உனக்கு இனிமே தண்ணியும் இல்லே; கிண்ணியும் இல்லே... வேற எதாவது மடத்தை பாரு" மீனா வெடிக்க ஆரம்பித்தாள்.
"மீனா..." செல்வா ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.
"சீனு ... வாழ்க்கையில உருப்படணுங்கற எண்ணம் உனக்கு சுத்தமா இல்லையா?" மீனா எடுக்கும் போதே ராஜதானியின் வேகத்தில் சினத்துடன் பேச ஆரம்பித்தாள். கோபத்தின் காரணமாக அவள் உதடுகள் இலேசாக துடித்து, வாயிலிருந்து சிறு எச்சில் துளிகள் சிதறின.
'ம்ம்ம்... எனக்கு இது ஒரு தலைவேதனை... இவங்க ரெண்டுபேருக்கள்ள வர்ற வழக்கமான போராட்டம் ஆரம்பிச்சிடிச்சி. சீனு குடிச்சா இவளுக்கு என்னா? குடிக்கலைன்னா இவளுக்கு என்னா? இந்த நாய் என் பேச்சையே கேக்க மாட்டேங்கறான். நான் ஒரு முக்கியமான வேலையா இவனை வரச்சொன்னேன். இவ நடுவுல பூந்து, இவன் கிட்ட நாட்டாமை பண்ண ஆரம்பிச்சிட்டா; இன்னைக்கு என் வேலை முடிஞ்ச மாதிரிதான். இதான் என் போதாத காலங்கறது? எங்கப் போனாலும், எந்த வேலைக்குப் போனாலும், எனக்கு முன்னாடி சனியன் போய் நிக்கறான்? சனிக்கு கால் ஊனம்ன்னு சொல்றாங்களே? அவன் எப்படி என் லைப்ல மட்டும் வேக வேகமா ஓடறான்?'
'சீனு இன்னைக்கு குடிச்சிட்டு வந்து இருக்கறது மீனாவுக்கு கிளியரா தெரிஞ்சு போச்சு: இவன் வாரத்துல ரெண்டு நாள் குடுச்சுட்டு வந்து, மாடியில என் கூட மல்லாந்து கிடக்கறது மீனாவுக்கு சுத்தமா புடிக்கலை. இன்னைக்கு இவன் ஒழிஞ்ச்சான்.' செல்வா மனதுக்குள் புழுங்கிக்கொண்டே தன் தலையில் கையை வைத்துக்கொண்டான்.
"மீனா.. மெதுவா பேசுடு... அப்பா முழிச்சுக்கிட்டு இருக்கப் போறார்?" செல்வா நடுவில் நுழைந்தான்.
"சாரி மேடம்... கோச்சிக்காதங்க! ஃப்ரெண்ட் ஒருத்தன் பார்ட்டி குடுத்தான்; வேணாம்பான்னு எவ்வளவோ சொல்லிப் பாத்தேன்; ரொம்ப வற்புறுத்துனானுங்க; அதுக்கப்புறம் தட்ட முடியலை; நம்ம வேலாயுதத்துக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு; நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்; நீயும் என் கூட அந்த சந்தோஷத்துல கலந்துக்கன்னு சொன்னான். செல்வாவுக்கும் அவனை நல்லாத் தெரியும். எங்களுக்கெல்லாம் க்ளோஸ் ஃப்ரெண்ட்; நீ வேணா இவனைக் கேட்டுப் பாரேன்; இதெல்லாம் இன்னைக்கு ஒரு சோஷியல் நீட் ஆயிடிச்சி மீனா! புரிஞ்சுக்கம்மா!" சீனு தன் தரப்பு நியாயத்தை மெதுவாக எடுத்துச் சொல்ல ஆரம்பித்தான்.
"நீ தம் அடிக்கறது; ஒரு சோஷியல் நீட்; நான் புரிஞ்சிக்கறேன்; நீ தண்ணி அடிக்கறது ஒரு சோஷியல் நீட்; அதையும் நான் புரிஞ்சிக்கறேன். ராத்திரியில வேளா வேளைக்கு வீட்டுக்குப் போய் தூங்காம ஊர் சுத்தறயே, அதுவும் ஒரு சோவியல் நீட்; எனக்கு நல்லாப் புரியுது: ஆனா உனக்கு கேன்சர் வந்துசீக்திரமே சாகப் போறதும் ஒரு சோஷியல் நீடா? சொல்லுடா நான் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லு... இதை நீ என்னைக்கு புரிஞ்சுக்குவே?" அவள் முரட்டுத்தனமாக சீறினாள்.
"ஒரே புள்ளை: மணி பத்தாச்சு; பெத்த புள்ளை இன்னும் வீட்டுக்கு வரலையே, அவனுக்கு என்ன ஆச்சோ: ஏது ஆச்சோன்னு; வயிறு கலங்கி போய் உன் ஆத்தாக்காரி, 'மீனா ... என் புள்ளை சீனு உங்க வீட்டுல இருக்கானான்னு' இப்பத்தான் எனக்கு போன் பண்ணா. இந்த வயசுல, ரெண்டு நாளைக்கு ஒருதரம் இப்படி பதறிப் போறாங்களே, அந்த வயசான கெழத்துக்கு இது மாதிரியான தேவையில்லாத மன உளைச்சல், நிச்சயமா ஒரு சோஷியல் நீட்; எனக்கு இதுவும் நல்லாப் புரியுது."
"மீனா .. ப்ளீஸ் ... ப்ளீஸ்... உனக்கே நல்லாத் தெரியும்! நான் என்ன குடிகாரனா? தெனம் தெனமா குடுக்கறேன்? ஏதோ அப்பப்ப மாசத்துல, ஒரு ரெண்டு தரம் இப்படி பார்ட்டியில கலந்துக்கறேன். கட்டாயப்படுத்தறாங்களேன்னு ஒரு பெக் இல்லன்னா ரெண்டு பெக் அவ்வளதான். நீ எப்பவும் என்னை இந்த விஷயத்துல தப்பாவே பாக்கறே!"
"ஊர்ல இருக்கறவனுக்கு எல்லாம் கல்யாணம் ஆகுது? உனக்கு என்னைக்கு கல்யாணம் ஆவப்போவுது? என்னைக்கு உனக்குன்னு ஒரு குடும்பம் வரப்போவுது? நீ செய்யற வேலையைப் பாத்தா, ஒழுங்கா வாழ்க்கையில செட்டில் ஆகணும்ன்னு நினைக்கற எவளும், உன்னைத் திரும்பி கூட பாக்க மாட்டா.. அப்படியே எவளையாவது உன் அம்மா உனக்கு கட்டி வெச்சாலும், அவ மூணு மாசத்துல உன்னை விட்டுட்டு ஓடிப்போயிடுவா" மீனாவுக்கு மூச்சிறைத்தது.
"மீனா.. போதும்டி.. அவனை வாசல்லேயே நிக்க வெச்சு நீ கோர்ட் விசாரனையை ஆரம்பிக்காதடி... சத்தம் கேட்டு அப்பா வந்துடப் போறார். இந்த நேரத்துல அவரு இங்க வந்தா, கதையே கந்தலாயிடும்" செல்வா தன் நண்பனுக்காக வாதாட ஆரம்பித்தான்.
"வரட்டுமே; உங்க ரெண்டு பேருக்கும் அவருகிட்ட மட்டும் பயம் இருக்குல்லே? இவன் குடிச்சுட்டு சத்தம் போடாம இங்க வந்து படுத்திருந்துட்டு, காலையில நல்லப் புள்ளையா காப்பி வாங்கி குடிச்சுட்டு, தன் வூட்டுக்கு எழுந்து போவான். கண்டவனுங்க இங்க குடுச்சிட்டு வந்து படுத்து தூங்கறதுக்கு, எங்கப்பன் என்ன லாட்ஜா கட்டி வுட்டு இருக்கான். இல்ல இது முனிசிபாலிட்டிகாரன் கட்டி வெச்சிருக்கற தர்ம சத்திரமா? குடிக்காதடான்னு யார் சொன்னாலும் இவன் ஏன் கேக்க மாட்டேங்கறான்?"
"மீனா... சீனு என் ஃப்ரெண்ட்.. அவன் கண்டவன் இல்லே; இதை நீ நல்லா ஞாபகம் வெச்சுக்கிட்டு பேசு. அவனை நான் தான் வரச்சொன்னேன்; நீ எதுக்கு இப்ப தேவையில்லாம அவனை ரப்சர் பண்றே?"
"மீனா குட்டி... ப்ளீஸ் . இன்னைக்கு ஒரு நாளைக்கு கண்டுக்காதே; தப்பு நடந்து போச்சு: இனிமே இந்த பார்ட்டிக்கெல்லாம் சத்தியமா போக மாட்டேன்; மெதுவா பேசும்மா... நான் என்னா இந்த வீட்டுல கண்டவனா...?" சீனு குழைந்து கொண்டே அவளை நோக்கித் தன் கைகளை விளையாட்டாகக் கூப்பினான்.
"டேய் நீ என்னை குட்டி கிட்டின்னுல்லாம் கூப்பிட வேண்டிய அவசியமில்லே? குடிகாரன் பேச்சு: விடிஞ்சாப் போச்சு: உன் பேச்சைத் தண்ணி மேலத்தான் எழுதி வெக்கணும்.." மீனா மீண்டும் வெடித்தாள்.
"சாரி மீனா நீ கோபமாயிருக்கே .. நான் உன்னை இனிமே குட்டின்னு கூப்பிடமாட்டேன் ... பெரிசுன்னு கூப்பிடட்டா?" சீனு தன் சென்ஸ் ஆஃப் ஹுயூமரை துணைக்கு அழைத்தான்.
"நீ என் கிட்ட பேசாம இருந்தினாலே அதுவே ஒரு பெரிய புண்ணியம்... உன்னைப் பாத்தாலே எனக்குப் பத்திக்திட்டு வருது!"
"மீனா.. விடுடி... அவன் கிட்ட சும்மா விளையாடாதடி: சீனு பசியோட வந்திருக்கான்... நானும் இன்னும் சாப்பிடலை.. ஆளுக்கு ரெண்டு தோசை சூடா ஊத்திக்குடேன்... சாயங்காலம் செஞ்ச பஜ்ஜி இருந்தா அதையும் கொண்டா: தொட்டுக்க சின்ன வெங்காயம் போட்டு, தேங்காய் அரைச்சு ஊத்தி ஹோட்டல் சாம்பார் வெச்சிருக்கேன்னு அம்மா சொன்னாங்க" செல்வா தன் டிமாண்டை நேரம் பார்த்து அவள் முன்னால் வைத்தான்.
"நான் என்னா இவன் பொண்டாட்டியா? இவன் என்னா என் கழுத்துல தாலியா கட்டியிருக்கான்? இவன் குடிச்சுட்டு நேரம் கெட்ட நேரத்துல நம்ம வீட்டுக்கு வருவான்: இவனுக்கு நான் சுட சுட தோசை வாத்துப் போடறதுக்கு? பார்ட்டி குடுத்தவன் தோசை வாங்கிக் குடுக்கலையா? நீ ஒரு குடிகாரன் கூட சேர்ந்துக்கிட்டு அவனுக்கு வக்காலத்து வாங்கறே?" மீனா படபடவென் வேகமாக பொரிந்துவிட்டு, தன் பின்னலின் மனையை திருகிக்கொண்டு நின்றாள். அவள் கைகள் இலேசாக நடுங்கி, முகம் கோபத்தில் சிவந்து கொண்டிருந்தது.
"மீனா ... போதும் நிறுத்துடி ... சீனு என் ஃப்ரெண்டு: அவன் எப்ப வேணா என் வீட்டுக்குள்ள வருவான். போவான்: நானும் பாத்துக்கிட்டே இருக்கேன்; நீ இன்னைக்கு ரொம்ப அதிகமா பேசறே: எல்லாத்துக்குமே ஒரு அளவு இருக்கு; சொல்லிட்டேன்; அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும் ..." செல்வாவுக்கு தன் தங்கை மீது எரிச்சலுடன் கோபமும் பொங்கியது.
"உன் ஃப்ரெண்டுன்னு நீ தானே சொல்றே? நீதானே வரச்சொன்னே? அப்ப நீயே தோசை சுட்டு குடு; சோறாவது ஆக்கிப் போடு: என்னை ஏன் உன் ஆசை பிரண்டுக்கு தோசை சுட்டு குடுக்க சொல்றே?" அவள் தன் முகவாயைத் தோளில் இடித்துக்கொண்டாள். கோபத்தில் எரிச்சலுடன் தன் வாயில் வந்ததை, வார்த்தைகளாக கன்னாபின்னாவென வீசிய மீனா, சட்டென தான் பேசுவதை நிறுத்திவிட்டு யோசிக்க ஆரம்பித்தாள்.
'எனக்கு சீனு மேல அவன் குடிச்சிட்டு வந்திருக்கானேன்னு கோபம்: அது வாஸ்தவம்தான்; அவன் அம்மா எப்படி பயந்து போய் போன் பண்ணாங்க? அவங்க ஏன் இப்படி கஸ்டப்படணுங்கற ஆதங்கம் எனக்கு இருக்கு? அதுவும் வாஸ்தவம்தான். ஆனா நடுவுலே ஏன் "நான் என்ன இவனுக்கு பெண்டாட்டியா, இவன் என்னா எனக்கு தாலி கட்டியிருக்கானான்னு' ஒரு வார்த்தையை பேசினேன்? என் வாய்லேருந்து எதனால இந்த வார்த்தை வந்தது? என் மனசுக்குள்ள என்ன இருக்கு?' மீனா தன் உதடுகளை அழுத்தமாக கடித்துக் கொண்டாள். அவளுக்கு தன் மனசு சற்றே இறுகி, நெகிழ்ந்து, மீண்டும் இறுகுவதைப் போலிருந்தது.
'எனக்கேத் தெரியாம, என்கிட்ட சொல்லாம, என் மனசுக்குள்ள இந்த பாவிப்பய சீனு நுழைஞ்சுட்டானா? இவன் எப்ப நுழைஞ்சான்? என் கனவுல கொஞ்ச நாளா ஒரு முகம் தெரியாத ஒருத்தன் வந்து, மீனு, மீனுன்னு சுத்தி சுத்தி வர்றானே: அவன் இவன் தானா?' பேதை மீனா தன் மனசுக்குள் விடையைத் தேடினாள்.
மீனாவின் கொதிப்பான வார்த்தைகளைக் கேட்டதும், செல்வாவும், சீனுவும் ஒருவரை ஒருவர் மவுனமாக பார்த்துக்கொண்டார்கள். இருவருக்குமே, இன்று மீனாவின் பேச்சில் இருக்கும் ஒரு வித்தியாசமான தொனி, அவள் பேச்சில் இதுவரை இல்லாத ஒரு உருமாறிய உணர்ச்சி, நெருப்பான வார்த்தைகளாக வெளிப்படுவதை, திகைப்புடன் பார்த்துக் கொண்டுருந்தார்கள்.
'மீனாவிடம் இதுவரைக்கும் கண்டிராத ஒரு தனித்துவம் இன்னைக்குத் தெரியுதே?' அவள் இயல்புக்கு மாறான, ஏதோ ஒரு உரிமையை, சீனுவின் மீது நிலை நாட்ட விரும்புகிறாள் என்பது இலேசாக புரிய வர, அது என்னவென்று புரியாமல் அவர்கள் மனதுக்குள் ஆச்சரியப்பட்டார்கள். உப்பு சப்பு இல்லாத விஷயங்களுக்காக மீனா, சீனுவிடம் வலுவில் சென்று அவனை சண்டைக்கு இழுப்பது சகஜம் தான் என்றாலும், இன்னைக்கு அவள் பேசற தோரனையே புதுசா இருக்கே? மீனாவை இன்னைக்கு புரிஞ்சுக்கவே முடியலியே? அவ என்ன சொல்ல விரும்பறா? சீனு அவ்வப்போது தண்ணி அடிப்பது மீனாவுக்கு தெரிந்த விஷயம் தானே? சீனு தண்ணி அடிச்சா சத்தம் போடாம, இங்க மாடி ரூம்ல வந்து படுத்துக்கறது ஒன்னும் புது விஷயம் இல்லையே? ஆனா இந்த காரணத்துக்காக இன்னைக்கு சீனுவை மீனா ஏன் இந்த காய்ச்சு காய்ச்சுறா?'
அவர்கள் இருவருமே சற்றே அதிர்ந்துதான் போயிருந்தார்கள். செல்வா யோசிக்க ஆரம்பித்தான்.
'மீனாவுக்கு என்ன பிரச்சனை? யார் மேல இருக்கற கோவத்தை மீனா இவன் மேல காட்டறா? அடிக்கடி, மீனாவும், சீனுவும் தேவையில்லாம ஏதோ ஒரு காரணத்தை வெச்சுக்கிட்டு தங்களுக்குள்ள சண்டை போட்டுக்குவாங்க; இது இந்த வீட்டுல ஒரு சாதாரண விஷயமா ஆகிப் போச்சு; வீட்டுல இருக்கற யாரும் இதை சீரியஸா எடுத்துக்கறது இல்லே? விளையாட்டா பேச்சை ஆரம்பிப்பாங்க; அது எப்பவும் வெனையிலத்தான் போய் முடியும்; மீனா வழக்கமா சண்டை முடிஞ்சதும், மனசுல கோபத்தோட முறுக்கிட்டு இருப்பா; ஒரு வாரம் சீனுவைப் பாத்தாலும், பாக்காத மாதிரி மூஞ்சை திருப்பிக்குவா. இந்த வெக்கம் கெட்ட சீனுதான், ஒவ்வொரு முறையும் எதையாவது சொல்லி, கொழையடிச்சி, மீனாக்கிட்ட ஹீ ஹீன்னு இளிச்சுக்கிட்டுப் போய், தன் நட்ப்பை, சினேகிதத்தை ரீஜார்ஜ் பண்ணிக்குவான். ஆனா இன்னைக்கு இவங்களுக்குள்ள நடக்கறது வழக்கமான சண்டை மாதிரி தெரியலையே? மீனா என்னைக்குமே இந்த மாதிரி உணர்ச்சி வசப்பட்டு, கண்ணு கலங்கி, சீனுகிட்ட இந்த மாதிரி ஒரு சீன் காமிச்சதில்லையே?'
சீனுவும், இன்று ஏதும் பேசாமல் மீனாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். செல்வாவின் மனதில் ஓடிய அதே எண்ணங்கள் அவன் மனதிலும் எழுந்து கொண்டிருந்தது.
"மச்சான், நான் கிளம்பறேன்; மதிக்காதவங்க வீட்டு வாசலைக் கூட மிதிக்க கூடாதுன்னு, எங்க அம்மா எனக்கு சொல்லிக் குடுத்திருக்காங்க. மதிப்பில்லாத வீட்டுக்குள்ள கால் வெக்கறது தப்புன்னு இப்ப எனக்கு ஃபீல் ஆவுது. இதுக்கு மேல, இங்க நான் யாருக்கும், எந்த விதத்துலயும் தொந்தரவு கொடுக்க மாட்டேன். இன்னைக்கு இந்த மாதிரி ஒரு சீன் இங்கே நடக்கறதுக்கு, ஒரு விதத்துல நான் காரணங்கறது உண்மைதான். அதுக்காக நான் நிஜமா வருத்தப்படறேன்." சீனு செல்வாவைப் பார்த்து மெல்ல முனகினான்.
"மிஸ் மீனா, அயாம் சாரி பார் தட், அண்ட் ஐ அன்கண்டீஷனலி அப்பாலஜைஸ் ஃபார் மை இம்பெர்டினன்ஸ்..." சொல்லிக்கொண்டே சீனு தான் உட்க்கார்ந்திருந்த வரந்தா படுக்கட்டிலிருந்து எழுந்தான்.
"டேய் மாப்ளே.. என்னடா பேசறே நீ? மீனாவைப் பத்தி உனக்கு நல்லாத் தெரியும்; நீ இன்னைக்கு நேத்தா அவளைப் பார்க்கிறே? மீனா அவ வழக்கம் போல எதையோ சொன்னாடா: அம்மா அவளை எதாவது சொல்லியிருப்பாங்க: அதனால அவ இன்னைக்கு ஏதோ அப்செட்டா இருக்கான்னு நினைக்கிறேன். அம்மா மேல இருக்கற கோவத்தை அவ உன் மேல காமிக்கறா: நீயும் அவ பேசினதை, ரொம்பவே சீரியஸா எடுத்துக்கிட்டு பதிலுக்கு என்னன்னமோ பேசறே? என் மனசு ரொம்ப கஷ்டப்படுதுடா.." செல்வா sஈனுவின் கையைப் பிடித்தான்.
"உன் ஃப்ரெண்ட்க்கு குடுக்க வேண்டிய மதிப்பை, மரியாதையை நான் எப்பவும் போல, இந்த நிமிஷமும் குடுத்துக்கிட்டுத்தான் இருக்கேன்; உன் ஃப்ரெண்டை நான் ஒரு அன்னியனா நினைச்சிருந்தா, வெளியே போடான்னு ஒரே வார்த்தையில சொல்லியிருப்பேன்: இந்த வீட்டுக்குள்ள இனிமே நுழையாதேன்னு ஸ்ட்ரெய்ட்டா சொல்லியிருப்பேன்." அவளுக்கு இலேசாக மூச்சிறைத்தது. "இப்ப நான் யாரையும் இந்த வீட்டை விட்டு போகச் சொல்லலை: ஏன் குடிச்சுட்டு வராங்கன்னுத்தான் கேக்குறேன்? ஏன் குடிச்சுட்டு, தானும் அழிஞ்சு, மத்தவங்க மனசையும் புண்ணாக்கணும்ன்னுதான் கேக்கறேன்? ஏன் இப்படி நேரத்துக்கு சோறு தண்ணியில்லாம அழிஞ்சு போகணும்ன்னுதான் கேக்கிறேன்?”
செல்வா பதிலேதும் சொல்லாமல் மீனாவைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“செல்வா... உன் ஃப்ரெண்டுகிட்ட, நான் சொல்றதை ஒழுங்கா புரிஞ்சுக்க சொல்லுடா: குடிச்சுட்டு போதையில இருக்கறவங்களுக்கு அடுத்தவங்க சொல்றது எப்படி புரியும்?" மீனாவும் தன் அடித்தொண்டையில் பேசினாள்.
“ப்ளீஸ் மீனா; நான் சொல்றதை கேளு; ஒரு முக்கியமான விஷயம் பேசணும்ன்னு நான்தான் சீனுவை, இப்பவே வந்து ஆகணும்ன்னு கூப்பிட்டேன். அவன் மேல எந்த தப்பும் இல்லே..."
“உன் ஃப்ரெண்ட் வந்ததுல எந்த தப்பும் இல்லே; எப்ப வேணா வரட்டும்: எப்ப வேணா போகட்டும்; நீங்க என்ன வேணா டிஸ்கஸ் பண்ணிக்குங்க: அதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லே; அவரு குடிச்சுட்டு வந்திருக்காரே; அது சரியா? அவரு குடிச்சிருக்காருன்னு தெரிஞ்சும், நீ அவரை இந்த ராத்திரி நேரத்துல நம்ம வீட்டுக்கு கூப்பிட்டது சரியா?”
“மீனா அவன் தான் இனிமே பார்ட்டிக்கு போக மாட்டேன்னு உன் கிட்ட சொல்லிட்டானே? அப்புறம் எதுக்கு நீ இன்னைக்கு விடாம அவனை வம்புக்கு இழுக்கறே?”
சீனு எதுவும் பேசாமல் கேட்டுக்கு வெளியில் பார்த்துக்கொண்டிருந்தான். தன் நண்பன் இப்படி பேசமுடியாமல் தெருவைப் பார்த்துக்கொண்டுருப்பதை கண்டதும், செல்வாவுக்கு மனதில் கோபமும், ஆங்காரமும் பொங்க, மீனாவை ஒரு அறை விடலாம் போல் இருந்தது. ஆனா வயசுக்கு வந்த பொண்ணை, அடிச்சா, அம்மா என்னை வீட்டை விட்டே தொரத்திடுவா; என்று பொருத்திருந்தான்.
'மீனா இன்னைக்கு ஏன் இப்படி அழும்பு பண்றா?' தன் தங்கை மீனாவின் மீது அவனுக்கு அடக்கமுடியாத கோபம் வந்த போதிலும், செல்வாவுக்கு அந்த நேரத்தில் அவளை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று புரியவில்லை.
"மீனா நீ இப்ப என்னை என்னதான் பண்ணச்சொல்றே?" செல்வா எரிச்சலுடன் தன் தங்கையை நோக்கினான்.
"உன் பிரண்டை இனிமே 'குடிக்கமாட்டேன்னு' என் கையில அடிச்சு சத்தியம் பண்ணச் சொல்லு..." மீனாவின் கண்கள் கலங்கியது போல் இருந்தது. அவள் தன் மனதுக்குள் எதையோ முழுமையாக தீர்மானித்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டது போல், மிக மிக மிருதுவாக ஆனால் உறுதியான குரலில் பேசினாள்.
மீனா சொன்னதைக் கேட்டதும், சீன விருட்டென அவள் பக்கம் திரும்பினான். தன் எதிரில் பளபளக்கும் தங்க நிலவொளியில், மெல்லிய தேகத்துடன், ரோம நாட்டு பளிங்கு சிலை போல், கண்ணீருடன் கண்கள் இலேசாக மின்ன, தன் கையை நீட்டியவாறு நின்று கொண்டுருந்த மீனாவை அவன் உற்று நோக்கினான்.
'எனக்காக ஒரு பொண்ணு அழறளா? இருபது வருஷமா, என் நண்பனோட தங்கைன்னு நான் அன்பு காட்டற மீனாவை நானே அழ வெச்சுட்டேனா?' சீனுவின் உடலும் மனமும் பதை பதைத்து நடுங்கியது.
'மீனா என்கிட்ட என்ன சொல்ல விரும்புறா?' அவள் பேசுவது அவனுக்கு புரிந்தும் புரியாத ஒரு புதிராக இருந்தது.
சீனுவின் மனதுக்குள் இறுகிக் கிடக்கும் ஏதோ ஒரு வஸ்து மெதுவாக உருகுவது போல் உணர ஆரம்பித்தான். அவனால் நிற்க முடியவில்லை. அவன் கால்கள் காரணம் தெரியாமல் தொய்ந்து போனது.
மீனா தன் கூந்தலை பின்னி, முடியை ரப்பர் பேண்ட் போட்டு இறுக்கமாக கட்டியிருந்தாள். இறுக்கமான ரப்பர் பிடியிலிருந்து, வெளிவந்திருந்த ஓரிரு மெல்லிய மயிரிழைகள், நெற்றியின் இரு ஓரத்திலும், காற்றில் பறக்க ஆரம்பித்தன. இது வரை கம்பி கதவை பிடித்துக்கொண்டு, வெரண்டாவின் கடை படியில் நின்றிருந்த மீனா, இப்போது தானே தரையில் இறங்கி, தன் மெல்லிய, மூங்கிலைப் போன்று அழகாக நீண்டு வளைந்திருந்த, வலது கையை சீனுவின் பக்கம் நீட்டினாள்.
அவள் அன்று, கண்ணுக்கு இதமான வெளிர் பச்சை நிற சுடிதாரும், மேலே அதற்கு இணையாக, சிறு சிறு சிவப்பு பூக்கள் மலர்ந்திருந்த, வெள்ளை நிற குர்தாவும் அணிந்திருந்தாள். கழுத்தில் அணிந்திருந்த மெல்லிய தங்க சங்கிலியும் அதன் முனையில் அவள் கோத்திருந்த சிறிய நட்சத்திர டாலரும், அவள் மார்பின் மேல் ஆடிக்கொண்டுருந்தது. அவள் தோளில் துப்பட்டா இல்லாமல் நின்றிருந்ததால், அவளின் சிறிய அளவான இளம் மார்புகள், அவள் சுவாசத்துக்கேற்ப, மெல்ல மேலும் கீழுமாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தன.
மீனாவின் நீட்டிய கரத்தில் அவள் அணிந்திருந்த மெல்லிய பொன் வளையல்கள், அடித்த குளிர்ந்த காற்றில், மிக மிக லேசாக ஆடி, ஒன்றையொன்று உராய்ந்து "இணுங்க் ... இணுங்க்" என்று இனிய ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தன.
நிலா வெளிச்சத்தில் அவள் முகம் பளிச்சிட்டுக்கொண்டிருக்க, அவளுடைய மின்னும் சிறிய கருப்பு நிற கண்கள், கண்களின் மேல் சீராக செதுக்கப்பட்டிருந்து கரிய புருவங்கள், அழகிய துடிக்கும் இமைகளால், பாதி விழிகள் மூடியிருக்க, மெல்லிய உதடுகள் மிகமிக லேசாக பிளந்திருக்க, பிறை போல் பிளந்திருந்த உதடுகளின் நடுவில் பளிச்சிடும் சிறிய முத்தை ஒத்த பற்கள், மீனா வானத்திலிருந்து இறங்கி வந்த ஒரு குட்டித் தேவதையைப் போல் சீனுவின் கண்களுக்கு தெரிந்தாள்.
சீனுவின் பார்வை, மீனாவின் முகத்திலிருந்து கீழிறங்க ஆரம்பித்தது. அவளுடைய சட்டைக்குள் அழகாக மேடிட்டிருந்த இளம் மார்புகளில், ஒரு வினாடி தயங்கி தயங்கி நின்றது. பின் மெல்ல மெல்ல கீழிறங்கியது. காற்றில் அவள் அணிந்திருந்த சுடிதார், அவள் தேகத்தின் வளைவு நெளிவுகளில் ஒட்டிக்கொள்ள, அவளுடைய திடமான முன் தொடைகள், சீனுவின் கண்களில் மின்னலடிக்க, அவன் தேகம் புயல் காற்றில், தண்ணீரின் மேல் ஆடும் படகைப் போலானது.
மீனாவின் உடலழகை கண்ட சீனுவின் மன நிலைமை அத்தருணத்தில் ஒரு பைத்தியக்காரனின் மன நிலையை ஒத்திருந்தது. அவனுக்கு எல்லாம் புரிந்தது போலிருந்தது. அடுத்த வினாடியில் நடப்பது எதுவும் புரியாதது போலுமிருந்தது. சீனுவின் மனதில் எழுந்த உணர்ச்சிகளை, தன்னால் சொற்களால் விவரிக்கமுடியாது என்ற எண்ணம் அவன் மனதில் எழுந்தது. "கண்டவர் விண்டுலர், விண்டவர் கண்டுலர்ன்னு" இந்த நிலைமையைத்தான் சொன்னாங்களா?
சீனு குளிர்ந்திருந்த வெளிக்காற்றை நீளமாக இழுந்து மூச்சாக மாற்றி, மார்பில் சில நொடிகள் நிறுத்தி, பதட்டமில்லாமல் மெதுவாக தன் நாசிகளின் வழியாக வெளியில் விட்டான். பக்கத்தில் பிளாஸ்டிக் சேரில் சாய்ந்து உட்க்கார்ந்திருந்த செல்வாவின் மேல் ஒரு வினாடி அவன் பார்வை சென்று மீண்டது. அவன் உடம்பில் மாலை அருந்தியிருந்த மதுவின் போதை முழுவதுமாக இப்போது காணாமல் போயிருந்தது.
'மீனா இவ்வளவு அழகா! இத்தனை நாளா இவளை, வயசுக்கு வந்த ஒரு அழகான பெண், நாகரீகமான இளம் யுவதிங்கற கோணத்துலே இருந்து நான் பார்த்ததேயில்லையே? மீனா செல்வாவோட தங்கச்சி, என் உயிர் நண்பனோட ஆசைத் தங்கச்சி: ஒன்னும் தெரியாத சின்னப் பொண்ணு, இவளுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கு? சின்ன வயசுலேருந்து நான் பாத்து வளர்ந்த பொண்ணுன்னு, அவ மன உணர்ச்சிகளுக்கு, மதிப்பு குடுக்காமா, அவகிட்ட எப்பவும் எடக்கு மடக்கா பேசி, விளையாட்டுக்குத்தான்னாலும், எப்பவும் சண்டைக்குத்தானே அவளை இழுத்துக்கிட்டு இருந்தேன்? நான் எப்பேர்பட்ட மடையன்?'
'மீனாவின் இந்த மெல்லிய தேகத்துக்குள் இத்தனை உறுதியான மனம் ஒளிந்து கொண்டிருக்கிறதா? அந்த மென்மையான மனதில், என்னைப்போல ஒரு ஆண் மகன் மேல, என்னுடைய பொறுப்பில்லாத நடத்தையை, அதனால் அவளுக்குள் ஏற்படும் கோபத்தை, எரிச்சலை, இவளால இத்தனை உரிமையோட காட்ட முடியுமா? மீனா என் மேல ஏதோ ஒரு முழு சொந்தமும், உரிமையும் இருக்கற மாதிரி என்னை இன்னைக்கு தாளிச்சு கொட்டறாளே? என் மேல் அவளுக்கு இருப்பதாக நினைக்கும் அந்த உரிமை எது? அந்த உரிமைக்கு என்னப் பேரு? என் மேல் இவளுக்கு இத்தனை அக்கறையா? எதனால இந்த அக்கறை? இந்த அக்கறைக்கு என்ன அர்த்தம்? இவள் காட்டும் இந்த அக்கறைக்கு நான் தகுதியுள்ளவன்தானா?' சீனுவின் மனதில் கடலலைகளைப் போல் பலவித எண்ணங்கள் எழுந்து அவன் மனதின் மேல் தட்டுக்கு வந்து மோதின. அவன் பேசமுடியாமல் மரம் போல் நின்றான்.
சீனுவின் கண்கள் மீண்டும் சுழன்று சுழன்று மீனாவின் முகத்தில் சென்று படிந்தன. தன் பார்வையை அவள் விழிகளில் நிலைக்க விட்டான்.
மீனாவின் விழிகள் லேசாக நனைந்திருந்தன. இரு ஜோடி கண்கள் ஒன்றைஒன்று கூர்ந்து நோக்கின. சீனுவின் கூர்மையான பார்வையை சந்திக்கமுடியாமல், மீனா தன் விழிகளை ஒரு கணம் மூடித்திறந்தாள். மீனாவின் மனம், சீனுவின் முகத்தை பார் பார் என தூண்ட, அவள் மூடிய தன் விழிகளை மெல்ல திறந்தாள். தங்கள் இதயங்களில் ஏதோ ஓன்று மெல்ல மெல்ல இளகுவதை அத்தருணத்தில், இருவருமே பரஸ்பரம் உணர்ந்தார்கள்.
இருவரின் உதடுகளும், தத்தம் உதடுகளின் மேல் படிந்திருந்தன. இருவரின் உதடுகளுக்கு உள்ளிருந்த நாக்கு உலரத்தொடங்கியது. மீனாவை இழுத்து தழுவி, தன் பரந்த மார்பில் புதைத்துக்கொள்ள சீனுவின் மனம் விழைந்தது. அவன் கரங்கள் அவளை உடனே இறுக்தி அணைத்துக்கொள்ள துடித்தன. சீனுவின் கள்ளமில்லாத மனதில் நிறைந்திருந்த கண்ணியம் அவனைத் தடுக்க அவன் செயலிழந்து நின்றான்.
சீனுவின் மனசு, அவன் அனுமதியின்றி அவன் ரசித்து கேட்கும் பாடல் ஒன்றை அதுவாகவே இசைக்க ஆரம்பித்தது. செல்வா சுகன்யாவை நேசிக்க ஆரம்பிச்ச காலத்தில் இந்தப் பாடலை அடிக்கடி பாடுவான். அவன் பாடறதை கேட்டு கேட்டு, சீனுவும் அந்த பாட்டை வெகுவாக ரசிக்க ஆரம்பித்திருந்தான்.
'பார்வை ஒன்றே போதுமே! பல்லாயிரம் சொல் வேண்டுமா? பேசாத கண்ணும் பேசுமா? பெண் வேண்டுமா? பார்வை போதுமா? பார்வை ஒன்றே போதுமே!'
'செல்வா இந்தப் பாட்டை பாடினதுல அர்த்தமிருக்கு. ஆனா இந்தப்பாட்டு என் மனசுல இப்ப ஏன் ஒலிக்குது?' சீனு திகைத்தான்.
'சே.. சே... இது என்ன அபத்தமான எண்ணம்? மீனாவைப் பாத்து என் மனசுல இந்த மாதிரி எண்ணமா? இந்த எண்ணம் என் மனசுக்குள்ள வரது சரிதானா? இந்த எண்ணம் எனக்கு வந்ததே தப்பு? நான் குடிச்சிருக்கறதுனால இந்த எண்ணம் என் மனசுக்குள்ள இன்னைக்கு வந்திருக்கா? இல்லையே? என் போதை தெளிஞ்சு நான் சுய நினைவோடத்தானே இருக்கேன்? சுய நினைவோட இருக்கற என் மனசுக்குள்ள இந்த எண்ணம் வந்திருக்குன்னா, இந்த எண்ணத்துக்கு பேரு என்ன? காதல்? இதுக்குப்பேருதான் காதலா?'
சீனு தன் தலையை வேகமாக இடதும் வலதுமாக ஆட்டி தன் மனதில் எழுந்த அந்த எண்ணத்தை அதே நொடியில் வேரோடு கிள்ளி எறிய முயற்சி செய்தான். தோற்று நின்றான்.
'என் மனசுக்குள்ள வந்திருக்கற இந்த உணர்வு, மீனாவின் மனதுக்குள்ளும் எழுந்திருப்பது போல தெரியுதே? அவ கண்கள்ல இந்த காதல் உணர்வு தீர்க்கமா இருக்கே? இன்னும் நான் போதையில இருக்கேன்: அதனால என் மனசுக்குள்ள ஒரு தப்பான எண்ணம் எழுந்திருக்குன்னு சொல்லலாம். ஆனா மீனா தன் முழு உணர்வுகளுடன் தானே இருக்கா?'
"ஓமை காட்... இது என்ன ட்ராமா மீனா? இட் ஈஸ் ஹைலி ரிடிக்குலஸ்... சீனு குடிக்கமாட்டேன்னு, எதுக்காக உன் கையில அடிச்சு சத்தியம் பண்ணணும்?" செல்வா தன் பொறுமையை முற்றிலும் இழந்து தன் அடிக்குரலில் சீறினான்.
"நீதானே கேட்டே... 'நான் என்ன பண்றதுன்னு?' உன்னால உன் பிரண்டை குடிக்காம இருடான்னு சொல்ல முடியலை; அவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லேன்னு இருக்கே. என்னால அப்படி இருக்க முடியாது: உன் பிரண்டை திருத்தறதுக்கு எனக்கு இதைவிட்டா வேற வழி தெரியலை..."
மீனாவின் வாய் தன் அண்ணனுக்கு இயந்திரமாக பதில் சொல்லியது. அவள் முகம் உணர்ச்சிகளின்றி இறுகிய கல்லைப் போலிருந்தது. அந்த இடத்தில், அந்த கணத்தில், தன் அண்ணன் செல்வாவின் இருப்பை, அருகாமையை அவள் பொருட்படுத்தவேயில்லை. அவள் மனம் முற்றிலும் சீனுவையே நினைத்திருக்க, அவள் பார்வை சீனுவின் முகத்தில் குடிகொண்டிருந்தது.
அமைதியாக நின்றிருந்த சீனு, தன் மூன்று நாள் தாடியுடன் கருத்திருந்த தன் முகத்தை, ஒரு முறை தன் வலது கையால் மெதுவாக தடவிக்கொண்டான். தன் வலப்புறத்தில் சேரில் உட்க்கார்ந்திருந்த செல்வாவை ஒரு முறை ஆழ்ந்து பார்த்த சீனு, நிதானமாக மீனாவை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்தான். தன் வலது கையை நீட்டி, "சீனு" குடிக்கமாட்டேன் என்று நிச்சயமாக தனக்கு சத்தியம் செய்து கொடுப்பான் என்ற நம்பிக்கை கண்களில் நிறைந்திருக்க, தன் கால்களை மிக உறுதியுடன் மண் தரையில் ஊன்றி நின்றிருந்த மீனாவின் வெண்மையான செருப்பில்லாத அழகான பாதங்களையும், சிறிய விரல்களையும் பார்த்த சீனு, தன் பார்வையை நிமிர்த்தி இப்போது பதட்டமில்லாமல், மனதில் எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல், தன் மனதில் பொங்கும் காதலுடன், மீனாவின் முகத்தை சில வினாடிகள் கூர்ந்து நோக்கினான்.
மீனாவின் கண்களிலிருந்து, அவள் உள்ளத்தில் தன்பால் பொங்கி வரும் காதலை, பாசத்தை, நேசத்தை, அசைக்க முடியாத ஒரு நம்பிக்கையை, சீனுவால் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.
'என்னைத் திருத்துவதற்காக, இவள் தன் வாழ்க்கையை, பணயம் வைக்க முடிவு செய்துவிட்டாள். நான் அதிர்ஷ்டசாலி.'
சீனு, தன் மனதில் ஓடும் எண்ணத்தை சரியாக புரிந்து கொண்டதை மீனாவும் உணர்ந்து கொண்டாள். அவள் மெல்லிய உதடுகள் மெதுவாக அசைந்து, ஒரு சிறிய புன்னகை பூவை மலரச்செய்தன. சீனுவும் தன் மனதில் ஒரு தீர்க்கமான முடிவுடன், தனக்காக தன் வாழ்க்கையை பணயம் வைத்துக்கொண்டிருக்கும், அந்த அழகான இளம் பெண்னை நெருங்கினான். தன் வலது கையை உயர்த்தி அவள் உள்ளங்கையில் வைத்து இறுக்கமாக அழுத்தினான். பின் மெல்ல முனகினான்...
"இனிமே குடிக்க மாட்டேன்..."
சீனுவின் கரம் தன் கையில் அழுத்தமாக படர்ந்ததும் மீனாவின் முழு உடலும் மெல்ல சிலிர்த்தது. ஒரு ஆண் மகன், தன் மனதில் காதல் உணர்ச்சியுடன், மீனாவை தொட்டது இதுவே முதல் முறை. மீனாவுக்குள்ளும் ஒரு ஆணின் பால் காதல் உணர்வு எழுவது இதுவே முதல் தடவை. அந்த முதல் காதலால், அவள் மனம் விரும்பும் ஆணின் அன்பான முதல் தொடுகையால், இதுவரை அறியாத புதிய சுகமொன்று தன் உடல் முழுவதும் பரவுவதை அவள் உணர்ந்தாள். அந்த சுகத்தை முழுவதுமாக ரசித்து அனுபவித்தாள்.
மீனா நீளமாக காற்றை தன் மார்புக்குள் இழுத்து வெளியேற்றினாள். அவள் தன் எண்ணங்களில் தொலைந்து போனாள்.
'ஒரு ஆண் மகனின் கையில் இத்தனை சக்தி இருக்கிறதா? இதே சீனு, என்னை எத்தனையோ தரம் தொட்டிருக்கான். என் அம்மா, அப்பா, அண்ணன்னு எல்லோர் எதிரிலேயும் என் கையை பிடிச்சி இழுத்து இருக்கான்; கையை குலுக்கறேன்னு என் கையை பிடிச்சி அழுத்தி அழுத்தி, வேணுமின்னே, தன் உடல் வலுவைக்காட்டி, என்னை வலியால அழ வெச்சிருக்கான். என் இரு கைகளையும் முறுக்கி முதுகுக்கு பின்னாடி வெச்சு அடிச்சிருக்கான். அப்போதெல்லாம் அவன் தொடல், இந்த சுகத்தை என் தேகத்துக்குள் எழுப்பியதில்லையே?
சீனு என் கன்னத்தை கிள்ளியிருக்கான். தலையில குட்டியிருக்கான். அப்பல்லாம் எனக்கு கிடைக்காத இந்த சுகம், இப்ப மட்டும் எங்கேயிருந்து வந்தது?
சீனு இன்னைக்கு என்னை மிக மிக மென்மையா தொட்டப்ப வந்த சுகம், என் மேனியை சிலிர்க்க வெச்சு, எங்கேயோ கொண்டு போகுதே? எங்கள் இருவரின் இந்த தொடுகை எங்கே போய் முடியப்போகுது? தொடுதல் முக்கியமில்லை. தொடுபவர்கள் முக்தியமாகிறார்கள். தொடுபவர்களின் உணர்ச்சிகள் முக்கியமாகிறது.' தொடுதலின் ரகசியம் புரிந்த மீனா நீண்டப் பெருமூச்செறிந்தாள்.
மீனா, தன் கையில் அழுந்தியிருந்த சீனுவின் கையை, தன் மென்மையான பூ போன்ற கரத்தால் ஒரு முறை வலுவாக அழுத்தியவள், மெல்லிய குரலில் முனகினாள்
"தேங்க்யூ னு"
அடுத்த நொடி சீனுவின் கையை உதறிவிட்டு, திரும்பி மீண்டும் வெரண்டாவில் ஏற ஆரம்பித்தாள்.
"மீனா... எனக்கு ரொம்ப பசிக்குது மீனா... சாப்பிட எதாவது குடேன்..." சீனுவின் கரகரத்த குரல் அவள் காதில் வேகமாக வந்து மோதியது.
செல்வா சீனுவை வைத்த கண் வாங்கமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
சீனு, வீட்டினுள் நுழையும் தன்னையே பார்த்துக்கொண்யபுருப்பதை, தன் உள்ளுணர்வால் உணர்ந்த மீனா, ஒரு வினாடி நின்றாள். நின்றவள் மெல்ல இரும்பி, தான் நினைத்ததை சாதித்துவிட்ட மகிழ்ச்சியில், கண்களில் பாசம் பொங்க சீனுவை பார்த்தாள். அவள் கண்களில் இன்றுவரை இல்லாத ஒரு திருட்டுத்தனம் இப்போது குடியேறியிருந்தது.
முதலில் ஓரக்கண்ணால் செல்வாவைப்பார்த்தாள். அவன் தலை குனிந்து உட்க்கார்ந்திருக்க, மீனா, ஆசுவாசத்துடன், தன் மெல்லிய செவ்விதழ்களை குவித்து முத்தமிட்டு, சீனுவின் புறம் அந்த முத்தத்தை காற்றில் தள்ளிவிட்டாள்.
சீனு செய்வதறியாது, மனம் சிலிர்த்து, மீனா தனக்களித்த முதல் முத்தத்தை தன் இதயத்தில் சேகரித்துக்கொண்டு, செல்வாவின் எதிரில் படிக்கட்டில் மெல்ல உட்க்கார்ந்தான்.
தொடரும்...
சீனு மீனா காதல் பூத்து விட்டது 💕
ReplyDeleteசெல்வா தான் பாவம்
சீனு மீனா காதலா?! ஹும்! நடக்கட்டும்! நடக்கட்டும்!
ReplyDeleteஅஞ்சு நாளாச்சு! அடுத்த பாகம் காணோம்! எத்தனை பேர் போடச் சொல்லிக் கேட்கிறோம்?! போடுங்க
ReplyDelete