காதல் பூக்கள் 73
“நீங்க ரெண்டு பேரும்தான் போகமாட்டீங்க.. என்னையாவது போகவிடுங்க..." நல்லசிவத்தின் குரலில் ஒரு உறுதியும், வெறுப்பும் தெரிந்தது. அவர் தன் மனைவியின், இன்னும் கட்டுக்குலையாத, விம்மி விம்மித் தணியும் மார்பழகைப் பார்க்கமுடியாமல், அலையும் தன் மனதை ஓரிடத்தில் நிறுத்தமுடியாமல், தன் கண்களைத் தாழ்த்திக்கொண்டார்.
“என் புள்ளை கல்யாணத்தை நடத்திட்டு... உங்களுக்குப் பாக்கியா இருக்கற இந்த கடைசி கடமையையும் முடிச்சுட்டு, எங்க வேணா போங்க... அதுக்கப்புறம் நீங்கப் போறதைப் பத்தி எனக்கு கவலையில்லே... ஆனா இப்ப நீங்க பாதி ஆட்டத்துல வெளியே போறதை நான் அனுமதிக்கமாட்டேன்." ராணி முந்தானை சரிந்த நிலையில் கவர்ச்சியான ஒரு பெண் நாகமாக அவர் முன்னால் நின்று படமெடுத்து கொத்திவிடுவது போல் தன் தலையை ஆட்டினாள்.
'நாகம் படமெடுக்கும் போது பாக்கறதுக்கு அழகாத்தான் இருக்கு. அதுக்காக எவ்வளவு நாளைக்குத்தான் இவளோட இந்த உடம்பு அழகுல நான் கட்டுப்பட்டு நிக்கறது'
'காமம்... காமம்... காமம்... விசுவாமித்திரன் மொதல்கொண்டு இந்த நல்லசிவம் வரைக்கும் இந்த பெண் உடம்பின் மேல இருக்கற, ஆசையிலிருந்து, மோகத்துல இருந்து, விடுபட முடியாம தவிக்திறாங்களே? இதுக்கு ஒரு விடிவே இல்லையா? இதுதான் ஆண்களோட தலையெழுத்தா?'
'கையேந்தி நிக்கற பிச்சைக்காரன் மாதிரி இவ முன்னாடி, இதுக்காக அப்பப்ப ராத்திரி நேரத்துல நிக்க வேண்டியதா இருக்குது. அதுக்காக இவ போடற விதிகளுக்கு உட்பட்டு நிக்க வேண்டியதா இருக்குது.'
'ஆண்டவா! என் பார்வையில ஒரு தெளிவைக் கொடேன்! பெண்ணாசையை மனருக்குள்ளிருந்து ஒழிக்கணுங்கற ஒரே எண்ணத்தையும், வலுவையும் கொடேன்...! என் மனதில் இருக்கும் பெண் மோகத்தை வேரோடு சுட்டுப் பொசுக்கி, சாம்பலாக்கும் வைராக்கியத்தைக் கொடேன்.' நல்லசிவத்தின் மனது வெகுவாக அரற்றியது. ஒலமிட்டது.
'இவ தன் உடம்பை காமிச்சே என்னை எப்பவும் கட்டி போட்டுடறாளே. எனக்கு என்னைக்கு இதுலேருந்து விமோசனம்?' அவர் சுவாசம் வேகமாகவும் வெப்பமாகவும் வந்தது. மூச்சின் வெப்பத்தால் தன் நெஞ்சு வெடுத்துவிடுமோ என அவர் தன் மனதுக்குள் பயந்தார்.
'என் மூச்சு இப்பவே, இந்த நொடியே நின்னாலும் பரவாயில்லையே. விட்டுது ஆசை விளாம்பழ ஓட்டோடன்னு போயிடுவேனே. ஆனா இந்த பொம்பளையோட உடம்பு மேல இருக்கற ஆசையும், சதை வெறியும், காமவேட்க்கையும் என்னைவிட்டுப் போகலையே. அறுபது வயசுல இந்த வேட்க்கை போகலன்னா, எப்ப அது என்னை விட்டுப் போகும்? உடல் ஓய்ந்தாலும், மனம் ஓயவில்லையே. ஒரு பெண்ணின் உடலுக்குள் இத்தனை வசீகரமா? அந்த வசீகரத்தில், ஆண் என்றுமே தன் அகம் அழிந்து நிற்க வேண்டியதுதானா?' அவர் வெட்கத்தில் தன் தலை குனிந்து நின்றார்.
நல்லசிவம், தன் காலில் அணிந்த செருப்பை கழட்டி வேகமாக மூலையில் உதறினார். உதறித் கோளில் போட்டத் துண்டை வேகமாக மீண்டும் உதறி, வெரண்டாவில் கிடந்த மர ஈஸிச்சேரில் விரித்துப் போட்டு, சப்பனமிட்டு உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டார்.
கண்களுக்குள் ராணியின் செழிப்பான சிவந்த மேனி வந்து நின்றது.
நல்லசிவம் ஆசைப்பட்டு கல்யாணம் செய்து கொண்ட இள வயது ராணியின் உடல் மெல்ல மெல்ல வளர்ந்து விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தது. நீளமான கைகள், கொழுத்துக் குலுங்கும் மார்புகள், சிறுத்த இடை, அகலமான பிருஷ்டங்கள், பருத்த இடுப்பிலிருந்து இறங்கும் நீளமான, அடிவாழைத் தொடைகள், வலுவான கெண்டைக்கால் சதைகள், கருத்த முடியின் நடுவில் அழகான, சுகமான பாம்பின் படத்தையொத்த அல்குல்.
'அன்னைக்குப் பாத்தத்துக்கும் இன்னைக்கும் ஒரு மாத்து கொறையாம் இருக்காளே. அம்மா... இது என்ன வேதனை எனக்கு? இந்த முறையும் ராணிதான் ஜெயிச்சிட்டாளா? இவளை உதறித் தள்ளிட்டு ஓடணும்ன்னு பாக்கிறேன், முடியலியே.'
'ராணி ஜெயிச்சிட்டதா நான் ஏன் நெனைக்கணும்? இவளைப் பாத்து நான் ஏன் இந்த வயசுல வீட்டை விட்டு ஓட நினைக்கிறேன். வீட்டை விட்டு போனா என் புள்ளை பண்ற தப்புகள் என் கண்ணுல படமா இருக்கலாம். அவனைப் பத்தி மத்தவங்க தப்பா பேசறது காதுல விழம இருக்கலாம். ஆனா என் மனசுக்குள்ள இருக்கற காமம் என்னை விட்டு போயிடுமா? பெண்ணுடம்பு மோகத்தை மனதிலிருந்து தானே ஒழிக்கவேண்டும். மனசால நான் இவகிட்டேயிருந்து விலகாமல், உடலால் விலதி என்னப் பலன்?'
'இயல்பா இருடா நல்லசிவம். உன் இயல்பு என்ன? அதிகமாக பேசாமல் இருத்தல். உன் பிள்ளைக்கும் பொறுப்பு வரும். அதுவரைக்கும் நீ பொறுமையா இரேன். அவனை ஏன் நீ குறை சொல்லிக்கிட்டே இருக்கே? இருக்கப் போற கொஞ்ச நாளைக்கு மவுனமா இருந்துட்டுப் போயேன். உன்னை வேண்டாம்ன்னு சொன்ன ராணியை நீதான் விரும்பி அவதான் வேணும்ன்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டே. மனைவியா ஏத்துக்திட்டவளை, இந்த வயசுல என்னைக்கோ அவ பண்ணத் தப்பை மனசுக்குள்ள நெனைச்சு, விமர்சனம் பண்ணது சரியா? உன் பார்வையில் அது தப்பு. ராணி தன் பார்வையில அதை தப்புன்னு இதுவரைக்கும் ஓத்துக்கலையே. அவளை இந்த வயசுல உன் வயசுக்கு வந்த புள்ளை எதிர்ல விமர்சனம் செய்தது உன் தப்புத்தானே? உன் வாழ்க்கையில, உன் இளமையிலேயே ஒரு ஆறுமாசம், ஒரே வீட்டுல நீ இவ கூடவே இருந்துக்கிட்டு, ஓரளவுக்கு மனசாலேயும், உடம்பாலேயும், சுத்தமா ஆறு மாசம், ராணியை விட்டு நீ பிரிஞ்சுத்தானே இருந்தே? உன் மனசாலே இவகிட்டேயிருந்து மீண்டும் உன்னால ஓதுங்க முடியாதா? மனசால் ஒதுங்கினால்... உடல் ஓதுங்கத்தானே போகுது?' நல்லசிவத்தின் மனம் யோசித்து யோசித்து ஒருவாறு தன் புலம்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
நல்லசிவத்தின் முன் ராணி மூச்சிறைத்துக்கொண்டு நின்றிருந்தாள். தரையில் கிடந்த தன் முந்தானையால் தன் வியர்த்த முகத்தையும், கழுத்தையும் துடைத்துக்கொண்டாள். முந்தானையை ஒழுங்காக போடாமல், கோபத்தில் ஏனோதானோவென மார்பின் மேல், வீசியவள், கண்ணை மூடி அமர்ந்திருந்த நல்லசிவத்தின் முகத்தை ஒரு வினாடி உற்று நோக்கினாள். அவள் மனதிலும் விஷம் மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது.“அம்மா... இது என்னம்மா புதுக்கதை? உங்க ரெண்டு பேரோட லைப் ஸ்டோரியில, எனக்குத் தெரியாம ஒரு தனி ட்ராக் ஓடிகிட்டு இருக்கே? இட் சீம்ஸ் டு பி வெரி இன்ட்ரஸ்டிங்...!!" ஹாலில் சோஃபாவில் படுத்திருந்த சம்பத், வேகமாக எழுந்து வெரண்டாவிற்கு வந்தான்.
“நீ பொத்திக்கிட்டு போடா உள்ளே... அந்தக் கதை எனக்கும் என் புருஷனுக்கும் நடுவுல... எங்க கதையில நீ என்ட்ரி கொடுக்க வேண்டிய அவசியமில்லே...! உன்னை யாரும் இங்க தாம்பூலம் வெச்சு அழைக்கல" ராணி அவனை மூர்க்கத்துடன் இழுத்து ஹாலுக்குள் தள்ளினாள். தள்ளிய வேகத்தில் அவள் முந்தானை மீண்டும் அவள் தோளிலிருந்து நழுவியது.
“டேய் சொல்லேண்டா சிவதாணு வீட்டுல அப்படி என்னதான் நடந்தது?"
“நான் அவமானப்பட்ட கதையை நீ தெரிஞ்சிக்கிட்டே ஆவணுமா?" சம்பத்தின் குரலில் சிறிதே வன்மம் தொனித்தது.
“சம்பத்து... உனக்கு ஒரு அவமானம்ன்னா அது எனக்கு இல்லையாடா?" ராணி தன் மகனை சமாதானப்படுத்த முயன்றாள்.
“சுருக்கமா சொன்னா சுகன்யா ஒரு தரம் கூட என் மூஞ்சை ஏறெடுத்துப் பாக்கலைம்மா..."
“அப்படி எதுலடா நீ கொறைஞ்சுப் போயிட்டே அவளை விட?"
“இந்த ஒரு வார்த்தையை சொல்லி சொல்லித்தான் நீ என்னை ரொம்பவே ஏத்துவிட்டுட்டே. உன்னாலத்தான் இன்னைக்கு நான் அந்த நாய்கிட்ட அவமானப்பட்டேன்..."
“என்னப்பா சொல்றே நீ?"
“அம்மா... சும்மா டயம் பாஸுக்கு பசங்களோட ஜாலியா சுத்தற பொண்ணுங்க, அவனுங்க ஃப்ர்சைத்தான் குறி வெப்பாளுங்க..."
“ம்ம்ம்..."
“சுகன்யாஜிட்ட பணம் இருக்கு. அவ என் ட்ரஸ்க்கு மசியலை; என் படிப்புக்கு மசியலை; என் அந்தஸ்துக்கு மசியலை: என் கட்டான உடம்புக்கு மசியலை; இவ்வளவு ஏன்? நான் அவளுக்கு முறைப்பிள்ளைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும், சொந்தத்துக்கும் மசியலை.. அவ எதுக்குமே மசியலை!"
“ம்ம்ம்..."
“நான் என் கையை நீட்டு ஹாய்ன்னு சொன்னேன்; சுகன்யா என் கையைக்கூட புடிச்சு குலுக்கலை: அசால்டா வணக்கம்ன்னு சொல்லி கையை கூப்பிட்டா. அப்படீன்னா என்ன அர்த்தம்?"
“நீயே சொல்லுடா"
“அவ செவப்பு; நான் கருப்புன்னு அவளுக்கு திமிர்: ஆணவம்; அகங்காரம்: வேறென்னா?"
'அடி செருப்பால!' ராணி மனதுக்குள் கொதித்தாள். சம்பத் தன் தாயின் காயத்தை, ஆறிய புண்ணை, அதன் தழும்பை சரியாக வருடி கிள்ளிவிட்டான்.
“இன்னைய தேதியில ஆணும், பெண்ணும் ஹாய்ன்னு சொல்லி, கையை குலுக்கறது ரொம்ப சாதாரண விஷயம்மா..."
“சுகன்யாவுக்கு என் கையை குலுக்க பிடிக்கலையா? ரொம்ப நார்மலான ஒரு காரியத்தை அவ செய்யாததால, என்னுடைய ஆர்வத்தை புரிஞ்சுக்காததாலே, அவ மகாத்திமிர் புடிச்சவன்னுதான் அந்த சமயத்துல எனக்குப் பட்டுது."
“ம்ம்ம்... சரிப்பா... அவ கைகுலுக்கலைன்னா என்ன? இதை நீ ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்கறே?"
“எம்மா ... இந்த எண்ணம் சரியோ தப்போ இந்தப் மனப்போக்கை என்னால மாத்திக்கமுடியலை."
“இது தப்புடா சம்பத்து... எல்லா பொண்ணுங்களும் அப்படி இல்லடா" ராணி தன்னால் முடிந்தவரை, தன் மகனை அவனுடைய வழக்கமான, இயல்பான மனநிலைமைக்கு கொண்டு வர முயன்றாள்.
“எம்ம்மா... நீ செவப்பா, அழகா இருக்கியே! என்னை மட்டும் ஏம்மா கருப்பா பெத்தே?" அவன் குரலில் அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது.
“டேய் கண்ணு... ஒரு குழந்தையோட உடம்பு நெறத்தை ஒரு பொம்பளை மட்டும் முடிவு பண்ண முடியாதுடா... இவ்வளவு படிச்சிருக்கே! இதுகூடவா உனக்குப் புரியலை...?"
“அம்மா..." சம்பத்தின் கண்கள் இலேசாக கலங்கின...
“உன் உடம்பு நிறத்தையே ஏண்டா நினைச்சு நினைச்சு, எப்பவும் உனக்குள்ள கூனி குறுகிப் போறே?" ராணி தன் மகனின் முகத்தை தன் மார்போடு சேர்த்துக்கொண்டாள். அவன் தலையை மெல்ல வருடினாள்.
“அம்மா..."
“நீ படிக்கிற காலத்துலதான் கூடப் படிச்ச பசங்க அதைச்சொன்னாங்க; பொண்ணுங்க என்னைப் பாத்து கிண்டலா சிரிச்சாங்கன்னு அழுவே... இப்ப மன முதிர்ச்சியடைஞ்சு, கை நெறைய சம்பாதிக்கற, மெச்சூர்ட் யங் மேன் நீ... இன்னும் ஏண்டா உனக்கு இப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை?"
“ம்மா... நீ அந்தக் காலத்துலேயே நெறைய படிச்சிருந்தே? ஓரளவுக்கு சொத்து சுகத்தோட இருந்த குடும்பத்துலத்தான் பொறந்தே? இப்பவும் உன் அம்பத்து நாலு வயசுலேயும் நீ மகாலட்சுமி மாதிரி அழகாத்தான் இருக்கே... நீ ஏம்மா கருப்பா இருந்த என் அப்பாவை கல்யாணம் பண்ணிக்கிட்டே?"
“அடப் பாவி மவனே! ஒரு புள்ளை பெத்தவகிட்ட கேக்கற கேள்வியாடா இது?" தன் மகனின் மன வருத்தத்தை புரிந்து கொண்ட ராணி, தன் மகனின் அர்த்தமில்லாத கேள்வியை கண்டு சம்பத்தின் மீது தன் மனதுக்குள் எரிச்சலுற்றாள்.
“சாரிம்ம்மா... நான் இந்த கேள்வியை கேக்கக்கூடாதுதான். இன்னைக்கு நான் மனசால ரொம்ப நொந்து போயிருக்கேம்மா... அப்பா எதையுமே புரிஞ்சுக்காம பேசறாரு..."
“அவர் போக்குதான் உனக்குத் தெரியுமேடா?" மகன் தன் மடியில் கிடக்க ராணியின் மனதில் தாய்மை முழுமையாக நிறைந்திருந்தது.
“என் மனசுல சுகன்யாவோட நடத்தைக்கு காரணம் என் கருப்பு நெறம்தான்னு பட்டுடுச்சிம்மா.. என்னால அதைத் தாங்கிக்க முடியலைம்மா.." சம்பத்தின் கண்கள் கலங்கியிருந்தன.
“சச்ச்ச.. அப்படியெல்லாம் இருக்காதுடா... சுகன்யாவோட அம்மா சுந்தரியைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்... அவ கொஞ்சம் ரிஸர்வ்ட் டைப்டா.. அவ புருஷனுக்கும் அவளுக்கும் இருந்த பிரச்சனையால... அதிகமா அவ யாருக்கிட்டேயும் பேச மாட்டா... சுகன்யாவும் அப்பா இல்லாம அம்மா நிழல்ல வளர்ந்த பொண்ணுடா... அதனால சுகன்யாவும் அம்மா மாதிரி, யாரோடவும் ஓட்டாம, தனியா ஒதுங்கி இருப்பாளோ என்னவோ?"
“அடப் போம்மா... நீ வேற... நீயும் அப்பா மாதிரி அவ பக்கம் பேசற: கனகா பாட்டி வீட்டுக் கதவைத் தட்டினேன்... அந்த கமுதைதான் வந்து கதவைத் தொறந்தா? என்னமோ ஒரு சோப்பு விக்கப்போன சேல்ஸ்மேனைப் பாக்கற மாதிரிதான் மேலும் கீழுமா என்னைப்பாத்தா... வேண்டா வெறுப்பா யார்ரா நீன்னு கேட்டா?"
“ம்ம்ம்ம்... ஸ்ட்ரேன்ச்...” ஒரு நொடி, ராணி தன் மகன் சொல்லுவதைக் கேட்டுத் திகைத்தாள்.
“பின்ன என்னா, ஜீன்ஸ், டாப்ஸ், லேட்டஸ்ட் ஷூன்னு போட்டுக்கிட்டா மட்டும் போதுமா? சென்னையில வேலை செய்தா மட்டும் போதுமா? ஒரு நார்மல் கர்ட்டஸி அவளுக்குத் தெரியலையே?" சம்பத் குமைந்தான்.
“அப்பா சொன்னமாதிரி நான் சுகன்யாகிட்ட தப்பா எதுவும் பேசலைம்மா... சுகன்யா, உங்களுக்கு என்னைத் தெரியாது. ஆனா உங்களை எனக்குத் தெரியும்... ககவைத் தொறங்கன்னு மரியாதையாத்தான் நான் பேசினேம்மா..."
“ம்ம்ம்..."
“அதுக்கப்புறமும்... அவ கதவைத் தொறக்காம... பாட்டி யாரோ வந்திருக்காங்கன்னு உள்ளப்பாத்து குரல் குடுத்தாம்மா... அழகிப் போட்டியில நடக்கறவ மாதிரி தன் தோளை குலுக்கிட்டு, இடுப்பை ஆட்டிக்கிட்டு நடந்து உள்ளே போறாம்மா... நாயி..."
ராணிக்கு தன் மகனின் ஆதங்கம் புரிந்தது. தன் மகனும் ஒரு ஆண்தானே. தன் கணவன் தன்னை முதல் முறை பார்த்தவுடன் தன் அழகில் விழுந்தது போல், சம்பத்தும் சுகன்யாவின் அழகில் விழுந்துவிட்டான் எனத் தெளிவாக அவளுக்குப் புரிந்தது. மகனுடைய மனதின் தாபம் முழுசாக புரிந்தது.
“டேய் நீ சொல்றது சரிதாண்டா... சுகன்யா கொஞ்சம் திமிர் பிடிச்சவளாத்தான் இருக்கணும்!"
“இப்ப புரியுதாம்மா உனக்கு...? திமிரான ஒரு பெண்ணைப் பாத்தா ஒரு ஆம்பிளைக்கு எரிச்சல் வருமா? வராதா? நீயே சொல்லும்மா...?"
“....."
“நான் சுந்தரி வீட்டுக்கு, சுகன்யா இருக்கும் போது, நாலுதரம் போயிருக்கேன்... எங்கிட்டவும் எப்பவும் அந்த சுகன்யா முகம் கொடுத்துப் பேசினதே கிடையாதுடா...!” ராணி குதர்க்கமாகப் பேச ஆரம்பித்தாள்.
“பாத்தியா... பாத்தியா..." சம்பத் உற்சாகமடைந்தான். "நான் சொல்றதுல தப்பு ஒண்ணும் இல்லியே? உன்னையே அவ மதிச்சது இல்லே பாத்தியா...? அவ எங்க என்னை மதிப்பா?" சம்பத் வேகமாக கொம்பு சீவினான்.
“பிச்சைக்காரிக்கு, பழம் பொடவை போடற மாதிரி, இந்த சிறுக்கி சுகன்யா, என்னைப் பாத்து சின்னதா ஒரு நமட்டு சிரிப்பு சிரிச்சுட்டு, ஒவ்வொரு தரமும் எழுந்து மாடிக்கு போயிடுவா... அப்பவே இது எனக்கு வித்தியாசமா பட்டது." ராணி வேகமாக முழங்க ஆரம்பித்தாள்.
“ம்ம்ம்..."
“சுகன்யா, சின்னப் பொண்ணு, நாம ஆரம்பத்துலேருந்து பாம்பேயில இருந்துட்டோம்... சுகன்யா என்னைப் பாத்ததேயில்லே... நான் அவளுக்கு அத்தை உறவுன்னு, அவளுக்குத் தெரிஞ்சிருக்காதுன்னு நான் அப்பெல்லாம் நெனைச்சுப்பேன்...”
“நீ நெனச்சதுலே தப்பேயில்லை... ஆனா சுகன்யா அப்படியில்ல...”
“புது ஆளுங்ககிட்ட பேச கூச்சப்படறான்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கிட்டேன். நீ சொன்னதுக்கு அப்புறம்தான் இப்ப எனக்கு எல்லாமே நல்லாப் புரியுது?" ராணி தன் மகன் பக்கம் மொத்தமாக சாய்ந்துவிட்டாள்.
“அப்புறம்..?”
“நான் ஹால்லே உக்காந்து இருக்கேன்... அந்த கெழவி கனகா என்னை அவளுக்கு அறிமுகப்படுத்தறா, சுகன்யா... இந்த சம்பத்து உனக்கு அத்தைப் பிள்ளை..பெங்களூர்ல இஞ்சினீயரா இருக்கான்னு."
“கெழவிக்காவது உறவு மொறை தெரிஞ்சுருக்குதே?" ராணிக்கு தன் மனதில் ஒரு அசட்டுத்தனமான திருப்தி எழுந்தது.
“ஆனாம்மா... சுகன்யா வாயில அன்பா ஒரு வார்த்தையில்ல; அவ மூஞ்சில ஒரு சிரிப்பு இல்ல; சொந்தக்காரன்ங்கற ஒரு சலுகையில்ல; ஆம்பளைங்கற ஒரு மதிப்பு இல்ல. அப்படியா பாட்டீன்னு கேட்டுட்டு, திரும்பி என்னைப் பாத்து, ஒரு சின்ன முறுவல், ஒரு தலையாட்டல், ஒரு ஆமோதிப்பு, இப்படி எதுவுமே அவகிட்டருந்து வரலை."
“அப்புறம்..."
“அப்புறம் என்னா? சுகன்யா, பெரிய பத்தினி மாதிரி என்னைப் பாத்து கையை கூப்பிட்டு, மிஸ்டர் சம்பத், நீங்க பாட்டிக்கிட்ட பேசிக்கிட்டு இருங்க: “பீ கம்பர்டபிள்"ன்னு என் கிட்ட இங்லீஷ் பேசிட்டு, அடுத்த செகண்ட், கூடத்து ரூமுக்குள்ள நுழைஞ்சு, கதவை என் மூஞ்சிலே அடிக்கற மாதிரி சாத்திக்கிட்டாம்மா..."
“அவ்வளக் கொழுப்பா அவளுக்கு..? அவளைப் போயி நல்லப்பொண்ணுன்னு நெனைச்சுக்கிட்டு இருக்கேனே?" ராணி தன்னையும் அறியாமல் தன் பற்களைக் கடித்தாள். அழகான அவள் முகம் கோபத்தில் கருக்க ஆரம்பித்தது.
“கொழுப்பா... அவ்வளவும் நடிப்பும்ம்மா..."
“என்னடா சொல்றே?"
“சுகன்யா மெட்ராஸ்ல அவ வேலசெய்யற எடத்துல ஏற்கனவே ஒருத்தன் கூட ஜாலியா மஜா பண்ணிக்கிட்டு இருக்கா!"
“ஆச்சரியமா இருக்கே...! அப்பவே நெனைச்சேன்...! இதனாலத்தான் சுகன்யாவை உனக்கு குடுக்கமாட்டேன்னு, சுந்தரி சாக்கு போக்கு சொல்லிக்கிட்டு இருக்கிறாளா!!"
“வேற என்னா காரணம் இருக்க முடியும்?"
“சுகன்யா ஒருத்தன் கூட கூடி குலாவிக்கிட்டு இருக்கறது உனக்கு எப்படிடா தெரிஞ்சுது...?"
“எவன் கூட இவ குஜாலா சுத்தறாளோ... அவன் பேரு தமிழ்செல்வனாம்... அந்த நேரம் பாத்து... சிவதாணு கிழவன் நம்பர்கு அவன் போன் பண்ணி சுகன்யாவை கூப்பிடுன்னான்?"
“வாவ்... என்ன டிவிஸ்ட்டுடா ஸ்டோரியில" தாய், சின்னக்குழந்தையாக அசட்டுத்தனமாக சிரித்தாள்.
“ம்ம்ம்ம்... அப்ப அங்க சிவதாணு மாமா இல்லையா?"
“போன் அடிச்சப்ப கூடத்துல யாருமில்ல! சிவதாணு கக்கூஸ் போய் வர்றேன்னு என்னைத் தனியா வுட்டுட்டு போயிட்டார்: நான்தான் போனை எடுத்தேன்... அவன் என்னடான்னா, ரொம்ப உரிமையா சுகன்யாவை கூப்பிடுன்னான்..."
“ம்ம்ம... நல்லா போவுதுடா கதை..."
“என்னா நயினா...? சுகன்யாவை “அவ இவ"ன்னு ரொம்ப உரிமையா பேசரே...? நீ யார்ரான்னேன்? அவன் பயந்துப் போயி, சாரி சார்... சுகன்யா நம்பர் வேலை செய்யலை; சுகன்யாவும் நானும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்.. அர்ஜண்டா ஒரு மேட்டர், அவஜிட்ட பேசணும்... அவளைக் கூப்பிடுங்க சார்ன்னு கெஞ்சினான்."
“சரி...சரி... மேல சொல்லுடா"
“தோஸ்த்... நீ பேசறதைப் பாத்தா நீங்க ரெண்டு பேரும் வெறும் ஃப்ரெண்ட்ஸ்ன்னு தோனலையேன்னு, பட்டுன்னு ஒரு தூண்டிலைப் போட்டேன்.. மீனு சிக்கிடுச்சு!"
“புத்திசாலிடா நீ" தாய் தன் தனயனைப் பார்த்து பெருமைப்பட்டுக் கொண்டாள்.
“அம்மா... அந்த தமிழ்செல்வன் ஒரு கேணப்பயலாத்தான் இருக்கணும்... நான் யாருன்னு முழுசா கூட தெரிஞ்சுக்காம, சார்... நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம்... கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்ன்னு என் கிட்ட ஆசீர்வாதம் கேக்கறான்..?”
“என்னாது... நீ அவனை ஆசிர்வாதம் பண்ணியா?" ராணி வியப்படைந்தாள்.
“பின்னே என்னா..ம்ம்மா? என் மொறைப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப் போறவனை, நான் ஆசீர்வாதம் பண்ண வாணாமா? நானும் அவனை மனசார ஆசீர்வாதம் பண்ணிட்டேன்!"
“சம்பத்து... விஷயத்துக்கு வாடா... கண்ணு.. எப்படிடா நீ அவனை ஆசீர்வாதம் பண்ணே?" தாயின் குரலில் பெருமிதம் ஒலித்தது.
“என் மொறைப்பொண்ணு சுகன்யா: என் பேருல இருக்கற பட்டாவை, உன் பேருக்கு மாத்திக்குடுடான்னு எங்கிட்டவே கேக்கறியே.. இது ஞாயமாடான்னேன்?”
“ஹாங்.. போட்றா... அப்படி போடுடா... பிச்சிட்டடா... சம்பத்தா... கொக்கான்னேன்... என் பட்டுடா நீ?" தாய் பூரித்துப் போனாள்.
“அப்படியே அசந்து பூட்டான் அவன்..."
“அருவாளை அழுத்தமாத்தான்டா வீசியிருக்கே" ராணியின் முகம் பெருமிதத்தில் மின்னியது.
“மனசார ஆசிர்வாதம் பண்ணிட்டு வந்துருக்கேம்மா... கொளுத்திப்போட்டேன் பாரு ஒரு ஆயிரம் வாலா சரவரிசைப் பட்டாசை... அந்த திமிர் பிடிச்ச சுகன்யா கல்யாணம் நின்னுப் போனாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லே. பாத்துக்கிட்டே இரு... மெட்ராஸ்ல்ல்ல வெடி வெடிக்கற சத்தம், கும்பகோணம், சுவாமிமலைன்னு ஊரே அதிரப் போவுது பாரு..." சம்பத் ஆங்கார, ஓங்காரமாக சிரித்தான். தப்புபண்ணியவனை தட்டிக்கேட்க் வேண்டிய தாயும், தன் பிள்ளையுடன் சேர்ந்து வகை தொகையில்லாமல் சிரித்தாள்.
“அப்புறம்...?” ராணி ஏதோ சின்னத்திரை ரியல் பார்ப்பது போல் ஆர்வமாக இருந்தாள்.
“பாஸ், நான் சுகன்யாவை எட்டு வருவமா காதலிக்கறேன்.. நீ என்னடான்னா எங்க நடுவுல பூந்து அவளை பிராக்கெட் போட்டா, உன் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு நான் என்னா ஏலக்காய் தட்டிப்போட்டு, பாலை சுண்டக் காய்ச்சி அவ கையில குடுத்தனுப்புவேனான்னேன்?"
“சத்தியமா சொல்றேம்மா... அந்த தமிழ்ச்செல்வன் புசுக்குன்னு சுத்தமா அவிஞ்சிப்பூட்டான். பேச்சு, மூச்சு எல்லாம் அடங்கிப் போச்சு அவனுக்கு... வார்த்தையே வர்லே வாய்லேருந்து...” ஹோவென மீண்டும் சிரித்தான் சம்பத்.
“சம்பத்து... நீ ஆட்டத்தை சரியா ஆரம்பிச்சிட்டேடா; மீதி கதையை நான் பாத்துக்கறேன்டா: நான் தாயக்கட்டையை கையில எடுத்தா எப்பவும் மொதல் உருட்டல்ல, தாயம்தாண்டா விழும்; சுகன்யாவை உனக்கு நான் கட்டி வெக்கிறேன்." ராணி, மகாபாரதத்தின் பெண் சகுனியாக மாறி, வீம்பாக தன் மகனின் மனசு புரியாமல் கொக்கரித்தாள்.
“அம்மா...! நீ என்னா உன் புள்ளையை, குப்பைத் தொட்டியில வீசிப்போட்ட, எச்ச எலையில மிச்சம் இருக்கற சோத்தை, நக்கித் திங்கற நாயுன்னு நெனைச்சிட்டியா?" சம்பத்தின் கருத்தமுகம் குரோதத்தில் மேலும் கருத்தது. சம்பத் கோபத்துடன் தன் தொடையை ஓங்கித் தட்டிக் கொண்டான்.
“என்னடா சொல்றே நீ...? எனக்குப் புரியலைடா...!" திடுக்கிட்டாள் ராணி.
“அம்மா, எவனோ தொட்ட ஒருத்தியை... நீ எனக்கு கட்டிவெக்கலாம்ன்னு பாக்கறீயே? ஒரு பெத்தவ பண்ற வேலையா இது? இதுக்கு மேல சுகன்யாவே வந்து, என்னைக் கட்டிக்க அவ தயார்ன்னு சொன்னாலும், அவளைக் கட்டிக்க நான் ரெடியில்லை; நான் என்ன மானங்கெட்ட மடையனா...?" சம்பத்தின் கண்கள் கோவைப் பழங்களாக சிவந்திருந்தன.
“சம்பத்து... நீ பேசறதுல ஞாயமில்லேடா..", ராணி முனகினாள்.
“சுகன்யாவுக்கு தாலி கட்டிட்டு, காலம் பூரா அவளைப் பார்க்கும் போதெல்லாம், அவளைத் தொடும்போதெல்லாம், அவளை புருஷனா கொஞ்சும் போதெல்லாம், என் பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னாடி எவனையோ காதலிச்சவ, காதலிச்சவனை கட்டிப்புடிச்சி கொஞ்சி குலாவினவங்கற நெனைப்புலயே, வாழ்க்கைப் பூரா, இந்த விஷத்தை நான் மெல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம, மருகி மருகி மனசுக்கள்ளவே சாகணுமா?"
“டேய்... நீ ஒரு பொண்ணை அவமானப்படுத்தறடா...” தன் மகன் ஒரு ஆண் ஆதிக்கத்தின் மொத்த உருவம், குறியீடு, அடையாளம்... என ராணியின் மனது ஓலமிட்டது.
“ஏற்கனவே ஒருத்தன் கூட நெருக்கமா பழகிட்டு இருக்கற சுகன்யாவை, அவனையே கல்யாணம் பண்ணிக்க இருக்கற சுகன்யா கூட, உன் புள்ளை, நிம்மதியா ஒன்னாப் படுத்து தூங்க முடியும்ன்னு நீ நெனக்கறியாம்மா?"
“அப்பறம் ஏண்டா அந்த தமிழ்செல்வன்கிட்ட சுகன்யாவை நான் எட்டு வருஷமா காதலிக்கறேன்னு கதைவுட்டே?" ராணியால் பொறுக்கமுடியாமல் பதறினாள்.
“வெரி சிம்பிள்.. என்னை மதிக்காதவளை நான் பழிவாங்க நெனைச்சேன்... அவளை நான் கட்டிக்க நெனக்கலை... எனக்கு அவ கொஞ்ச நேரமாவது அழுவணும்.. அவ்வளவுதான்..."
“நீ அவளை கட்டிக்க ஆசைப்படறேன்னு நான் நெனைச்சேண்டா" ராணிக்கு தன் மகனின் உள்ளம் மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது.
“ஆனது ஆச்சு, போனது போச்சுன்னு, அவளைக் கட்டிக்கிட்டு, சந்தோஷமா குடும்பம் நடத்தற அளவுக்கு, பரந்தமனசு எனக்கு இல்லே: அவ்வள பெரிய மனுஷன் நான் இல்லேம்மா..."
“டேய்... சம்பத்து. இது தப்புடா கண்ணு... வேணாம்டா இந்த விளையாட்டு..." இப்போது ராணி தன் மகனிடம் புலம்ப ஆரம்பித்தாள்.
“அம்மா... நான் ஒரு சாதாரண ஆசாபாசமுள்ள மனுஷன், எவனோ தொட்டு வுட்டுட்ட பொண்ணை கட்டிக்கிட்டு, நான் ஒரு பெரிய தியாகின்னு சொல்லி, யாருகிட்டவும் மெடல் வாங்க எனக்கு விருப்பமில்லே..." சம்பத்தின் முகத்தில் கேலியும், கிண்டலும், விளையாடிக் கொண்டிருந்தன.
“எம்மாடி, ராணி... இவ்வளவு நேரமா, உன் ஆசைப் புள்ளைக்கூட சேர்ந்து சந்தோஷமா, ஒரு பொண்ணு வாழ்க்கையில, தேவையில்லாம அவன் விஷத்தை ஊத்திட்டு வந்த கதையை, பெருமையாச் சொல்லச் சொல்ல, நீ சிரிச்சு சிரிச்சுக் கேட்டு சந்தோஷப்பட்டியே, இப்ப அவன் “நான் என்ன மானங்கெட்ட மடையனான்னு” கேட்ட கேள்விக்கு உங்கிட்ட பதில் எதாவது இருக்கா? இப்பவாவது உன் புள்ளையோட அசல் ரூபம் என்னான்னு உனக்குத் தெரியுதா?” நல்லசிவத்தின் முகம் சலனமின்றி இருந்தது.
“அப்பா, நான் அவமானப்பட்டதை நீங்க ஒரு பொருட்டாவே நெனைக்கலையா?" மகன் தன் தகப்பனிடம் சீறினான்.
“நான் உன் புள்ளையை மதிக்கலேன்னு சொல்றியே! உன் புள்ளை ஒரு நல்ல குடும்பத்து பொண்ணுக்கு குடுக்கற மதிப்பை பாத்துட்டியா? ஒரு வயசுப் பொண்ணோட வாழ்க்கையை கெடுக்கற மாதிரி ஒரு காரியத்தைப் பண்ணிட்டு வந்ததுமில்லாம அவளைப்பத்தி எப்படியெல்லாம் அவதூறாப் பேசறான்னு பாத்தியா?"
“....." ராணி மவுனமாக இருந்தாள்.
“மானம் கெட்டவனுக்கு ஒரு புது டெஃபினிஷன் - அதான்டி, குப்பைத் தொட்டியில வீசிப்போட்ட, எச்ச எலையில மிச்சம் இருக்கற சோத்தை, நக்கித் திங்கற நாயுன்னு உன் புள்ளை உனக்கு புது விளக்கம் குடுத்து இருக்கானே, இதுல உனக்கு சந்தோஷம்தானே" நல்லசிவம் தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு, பீறிட்டுக்கொண்டு வரும் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்தார். சிரித்தவர், பக்கத்திலிருந்த சோஃபாவில் உட்க்கார, அவரது கை அவரையும் அறியாமல் அவர் தலையை சென்றடைந்தது.
“ஏம்மா... உன் புருஷனுக்கு இன்னா பைத்தியம் புடிச்சு போச்சா? ஏன் இப்படி சிரிக்கணும்? நான் சொன்னதுல சிரிக்கறதுக்கு என்ன இருக்கு?" சம்பத் வெகுண்டான்.
“அப்பா. எவனோ தொட்ட ஒருத்தியை நீங்க கட்டிக்கிட்டு உங்களால வாழ முடியுமா? உங்க மனசைத் தொட்டு சொல்லுங்கப் பார்ப்போம்?" தன் தகப்பனின் சிரிப்பின் அர்த்தம் அவனுக்குப் புரியாததால் சம்பத் தன் தகப்பனை வெறுப்புடன் கேட்டான்.
“டேய்.. நீ கொஞ்ச நேரம் சும்மா இருடா..." ராணி விரிந்து கிடந்த தன் கேசத்தை கொத்தாக முடிந்தவாறு எழுந்து நின்றாள்.
“எதுக்கு இப்ப குடி முழுகிப் போன மாதிரி தலையில கையை வெச்சிக்கிட்டு உக்காந்து இருக்கீங்க?" ராணி தன் கணவரின் அருகில் சென்று அவர் கையை, அவருடையத் தலையிலிருந்து விலக்கினாள்.
“ராணி நீ தெரிஞ்சே எரியற கொள்ளிக் கட்டையை எடுத்து உன் தலையைச் சொறிஞ்சுக்கற...! உன் புள்ளைப் பாசம் உன் கண்ணை மறைக்குது! நீ உன் புள்ளை மேல இவ்வளவு மோகம் வெக்காத! அவனை, அவன் வாழ்க்கையை கெடுக்காதே! ஒரு நல்லப் பொண்ணோட வாழ்க்கையில் நீங்க ரெண்டு பேரும் விளையாடாதீங்க. பெண் சாபம் நம்ம குலத்தையே எரிச்சுடும். உன் புள்ளைக்கு நல்லபடியா எடுத்துச் சொல்லி, அந்த தமிழ்செல்வனுக்கு போன் பண்ணி இவன் பண்ண தப்புன்னு மன்னிப்பு கேக்கச் சொல்லுடி."
“.....”
“யாருதிட்டவும் மன்னிப்பு கேக்க வேண்டிய அவசியம் எனக்கில்லே?" சம்பத் அர்த்தமில்லாமல் எகிறினான்.
“நான் சொல்றதை நல்லாக் கேட்டுக்க. திருதராஷ்ட்ரனும் புத்திர பாசத்துலத்தான் அழிஞ்சான்... தசரதனும் புத்திர மோகத்தாலத்தான் அழிஞ்சான்... நீயும் நானும் இவ்வளவு நாள் ஒண்ணா இருந்ததுக்கு ஒரு காரணம் உன் புள்ளையாலத்தாங்கறது உனக்கு நல்லாத் தெரியும். நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம். உப்பு தின்னவன் தண்ணி குடிச்சாகணும். தப்பு பண்ணவன் தண்டனை அனுபவிச்சே ஆகணும். யாராலும் மாத்தவே முடியாத இயற்கையின் முதல் விதி இது."

இது, கிளைக் கதை, புதுக் கதை
ReplyDeleteathe kathai than
Deleteஅதே கதையில் கிளைக் கதை! சம்பத் அம்மா அப்பா ராணி நல்லசிவத்தின் புதுக்கதை ன்னு சொல்ல வந்தேன்!
ReplyDelete